Published : 07 May 2018 08:06 AM
Last Updated : 07 May 2018 08:06 AM
காங்கிரஸை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், நடிகருமான அம்பரீஷ் நேற்று மஜத மாநில தலைவர் குமாரசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். காங்கிரஸில் அதிருப்தியில் உள்ள அம்பரீஷ் குமாரசாமியை சந்தித்தது கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த கன்னட நடிகர் அம்பரீஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸில் இணைந்து எம்பி ஆனார். கடந்த 2013 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வான இவர், முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசில் வீட்டுவசதித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அமைச்சரவையில் அம்பரீஷ் அக்கறை காட்டாமல் இருந்ததால் சித்தராமையா அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இதனால் அம்பரீஷ் சித்தராமையாவுக்கு எதிராக வெளிப்படையாகவே பேசிவந்தார்.
இருப்பினும் அம்பரீஷூக்கு மண்டியா தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்தது. ஆனால் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் அம்பரீஷ் திடீரென தலைமறைவானார். மனு தாக்கல் முடிந்தபிறகே வெளியே வந்து உடல்நிலை சரியில்லாததால் போட்டியிடவும் பிரசாரம் செய்யவும் முடியாது’’ என்று அறிவித்தார்.
இந்நிலையில், அம்பரீஷ் நேற்று மஜத மாநில தலைவர் குமாரசாமியை சந்தித்து பேசினார். ஏற்கெனவே காங்கிரஸில் இருந்த ஒக்கலிகா தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவுக்கு தாவியதால் மைசூரு மாகாணத்தில் காங்கிரஸின் வாக்கு வங்கி சரியும் என கூறப்பட்டது. இப்போது ஒக்கலிகா பிரிவைச் சேர்ந்த அம்பரீஷூம் மஜதவுக்கு ஆதரவாக மாறியுள்ளதால் மைசூரு மாகாணத்தில் காங்கிரஸூக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT