Published : 13 May 2018 10:04 AM
Last Updated : 13 May 2018 10:04 AM
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 150 இடங்களில் வென்று, வருகிற 17-ம் தேதி முதல்வராக பதவி ஏற்பேன் என பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று தேர்தல் வாக்குப்பதிவு நடந்தையொட்டி ஷிமோகாவில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலையில் சிறப்பு பூஜை நடத்தினார். பின்னர் தன் மகன் விஜயேந்திராவுடன் ஷிகாரிபுராவில் உள்ள சங்கட விமோச்சனா ஆஞ்சநேயா கோயிலுக்கு சென்று எடியூரப்பா பூஜை செய்தார்.
இதையடுத்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், முதல் ஆளாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து மகன்கள் விஜயேந்திரா, ராகவேந்திரா உள்ளிட்ட குடும்பத்தினரும் உற்சாகமாக வாக்களித்தனர். ஆனால் எடியூரப்பா மிகவும் பதற்றமாகவும், சோர்வாகவும் காணப்பட்டதால் பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு விஜயேந்திரா, 'கடந்த 6 மாதமாக தேர்தல் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் எடியூரப்பா களைப்பாக இருக்கிறார்'என பதில் அளித்தார். பின்னர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசும்போது,'' கர்நாடக மக்கள், சித்தராமையாவின் மோசமான ஆட்சியால் அதிருப்தி அடைந்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறப்பான ஆட்சியை வழங்குவோம். மக்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலில் 150 இடங்களில் வென்று, பாஜக ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. எனவே வரும் 17-ல் பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வராக பதவி ஏற்பேன்''என்றார்.
யோகி நம்பிக்கை
கர்நாடக தேர்தல் குறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகித் ஆதித்யநாத் கூறியதாவது:
கர்நாடகாவில் பாஜக முழுப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும். கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். மக்கள் காங்கிரஸைத் தண்டிப்பார்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் பணத்தை நம்பி களமிறங்கியுள்ளனர். மக்கள் இதை ஏற்கமாட்டார்கள் .
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT