Published : 22 Apr 2018 09:01 AM
Last Updated : 22 Apr 2018 09:01 AM

உள்ளாட்சி அமைப்பு தற்சார்புடன் செயல்பட புதிய நடைமுறை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உள்ளாட்சி அமைப்புகள் தற்சார்புடனும் பொருளாதார ரீதியில் ஸ்திரமாகவும் கூடுதல் செயல்திறனுடன் செயல்படும் வகையில், தேசிய கிராம சுயாட்சி திட்டம் (ஆர்ஜிஎஸ்ஏ) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் வழங்கியது.

இது தொடர்பாக பஞ்சாயத்துராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று கூறும்போது, “இத்திட்டத்தை பிரதமர் மோடி வரும் 24-ம் தேதி ம.பி.யில் தொடங்கி வைப்பார்.

இத்திட்டத்துக்கு 2108-19 முதல் 2021-22 வரையிலான நிதி ஒதுக்கீடு ரூ.7,255 கோடியாக இருக்கும். இதில் 60 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும். 2.55 லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துராஜ் அமைப்புகளுக்கு ஆர்ஜிஎஸ்ஏ மிகவும் உதவியாக இருக்கும். கிடைக்கும் வளங்களை திறம்பட பயன்படுத்தவும் நிர்வாகத் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் வளர்ச்சி இலக்குகளை எட்டவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய திட்டம் உதவியாக இருக்கும்” என்றார்.

கடந்த 2016-17 மத்திய பட்ஜெட்டின்போது தேசிய கிராம சுயாட்சி திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டம் முதல்கட்டமாக 115 மாவட்டங்களில் செயல்படுத்த உள்ளது. இந்த மாவட்டங்களை நிதி ஆயோக் ஏற்கெனவே தேர்வு செய்து வைத்துள்ளது.

இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களை ஒருங்கிணைத்து செயல்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x