Published : 25 Apr 2018 07:35 PM
Last Updated : 25 Apr 2018 07:35 PM
நாட்டின் மிகத் தொன்மையான மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அலிகர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. இதன் வரலாற்றுத் துறை ஆசியாவிலேயே மிகப்பெரியது. இதன் ஒரு பிரிவாக உள்ள தொல்பொருள் ஆய்வுப் பிரிவில் அருங்காட்சியகமும் அமைந்திருந்தது. இதில், வட மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுகளில் கிடைக்கும் தொல்பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கட்டிடத்தில் ஒரு புதிய துறையை நிறுவ, அங்கு 2017-ம் ஆண்டு வரை துணைவேந்தராக பதவி வகித்த லெப்டினெண்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீருத்தீன் ஷா விரும்பினார்.
அதன்படி, பல்கலை.யின் அருங்காட்சியகத் துறையில் இருந்த அருங்காட்சியகத்துடன் தொல்பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக பாதுகாத்து வைக்க ஜமீருத்தீன் ஷா முடிவு செய்தார். அதன் பொருட்டு, வரலாற்றுத் துறையின் அருங்காட்சியகம் காலி செய்யப்பட்டது. அப்போது காட்டப்பட்ட அலட்சியத்தால் பழமை வாய்ந்த பல தொல் பொருட்கள் திருடு போயின. வரலாற்றுத் துறை தலைவராக இருந்த பேராசிரியர் அலி அத்தரின் மேற்பார்வையில், தொல்பொருள் அருங்காட்சியக பொறுப்பாளரான ஓ.பி. ஸ்ரீவாத்சவா தலைமையிலேயே இந்தப் பொருட்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது.
அருங்காட்சியகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக, அதில் முக்கியமான பொருட்கள் மட்டுமே வைக்கப்பட்டது. மீதமுள்ளவை பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் குப்பை போல போட்டு வைக்கப்பட்டன. சுமார் 3 ஆண்டுகளாக பாதுகாப்பின்றி இருந்ததால், 25 சதவீத தொல்பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 5,000 ஆண்டு பழமையான இரும்புகாலம், செம்புக்காலம், சிந்து கங்கை சமவெளி, வேதகாலம் ஆகியவற்றின் பானை ஓடுகள், களிமண் வளையல்கள் உள்ளிட்டவை திருடு போயிருக்கின்றன. இதுதவிர, ஆக்ராவின் பதேபூர் சிக்ரி, அத்தரஞ்சிகேடா மற்றும் ஜாக்கேடா ஆகிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மூலமாக கிடைத்த தொல்பொருட்களும் காணாமல் போயுள்ளன.
இதுதொடர்பாக, இந்தியத் தொல்பொருள் தலைமையகத்தில் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், 4 பேராசிரியர்கள் அடங்கிய விசாரணைக் குழுவை அலிகர் பல்கலைக்கழகம் அமைத்துள்ளது. இதுகுறித்து அலிகர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “தொல்பொருட்கள் திருட்டை முறையாக விசாரிக்காமல் அலட்சியம் காட்டியவர்களை பாதுகாக்கும் முயற்சியில் விசாரணைக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்பு, இந்த வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய ஜெயாமேனன் என்பவரும் பல்கலைக்கழகங்களில் இருந்து தொல்பொருட்கள் ஏராளமானவற்றை கொண்டு சென்றிருக்கிறார். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய தொல்பொருள் ஆய்வகத்தினர் நேரடியாக தலையிட்டால் மட்டுமே உண்மை வெளியாகும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT