Published : 06 Apr 2018 12:07 PM
Last Updated : 06 Apr 2018 12:07 PM
இருபது ஆண்டுகளுக்கு முன், மான் வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நடிகர் சல்மான் கானுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க ஜோத்பூர் நீதிமன்றம் மறுத்து விட்டது. விசாரணையை நாளைக்கு (சனிக்கிழமை) ஒத்தி வைத்துள்ளது.
‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற ஹிந்தி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கடந்த 1998-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி சென்றிருந்தனர்.
அன்றைய தினம் இரவு, ஜோத்பூரை ஒட்டிய கங்கனி கிராமத்தில் அதிக அளவில் வசிக்கும் ‘வெளி மான்’ (பிளாக் பக்) என்ற அரிய வகை மான்கள் இரண்டினை சல்மான் கான் வேட்டையாடியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது, மேற்குறிப்பிட்ட நடிகர்களும் அவருடன் இருந்ததாக அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, தங்களின் வாக்குமூலங்களை மேற்கூறிய 5 நடிகர்களும் ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதிவு செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பான வாதங்கள் அனைத்தும், கடந்த மாதம் 28-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த வழக்கில் நடிகர் சல்மான் குற்றவாளி என நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதேசமயம் யீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
அப்போது நீதிபதி கூறுகையில் ’’சாதாரண மனிதர்கள் நடிகர்களை முன்மாதிரியாக கொள்கின்றனர். ஆனால் அவர்கள் அப்பாவி மான்களை வேட்டையாடுவதை ஏற்க முடியாது. இது சட்டவிதிமீறல் என்பதுடன் தவறான முன்னுதாரணமாகவும் அமைந்து விடும். எனவே இந்த வழக்கை நீதிமன்றம் கடுமையாக பாரக்கிறது’’ எனக்கூறினார்.
தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் உடனடியாக ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். நடிகர் என்பதால் அவரை பார்க்க பலர் சிறை வளாகத்தில் கூடியதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அவருக்கு கைதி எண் 106 வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவை சிறை கழித்த அவர் தூக்கம் இன்றி அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.
பல்வேறு படங்களிலும் ஒப்பந்தம் ஆகி இருப்பதால் உடனடியாக வெளியே வர அவர் விரும்புவதாகவும், இதனால் மேல்முறையீடு செய்யவும், உடனடியாக ஜாமீன் பெறவும் வழக்கறிஞர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சல்மான் கான் சார்பில் ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்து விட்டார். மனு மீதான விசாரணை நாளை தொடரும் என அவர் அறிவித்துள்ளார்.
இதனால் சல்மான் கான் இரண்டாவது நாளாக இன்றும் ஜோத்பூர் சிறையில் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT