Published : 21 Apr 2018 08:17 AM
Last Updated : 21 Apr 2018 08:17 AM
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான அரசியல்வாதிகளின் பேச்சு துரதிருஷ்டவசமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் இத்தகைய கருத்துகளை ஊடகங்கள் வெளியிட தடை விதிக்கும் கோரிக்கை குறித்து அட்டர்னி ஜெனரலின் உதவியை நாடியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யும் வகையில், அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மான நடைமுறைகள் தொடங்கப்பட்டால் அதுபற்றிய செய்தி வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா வாதிடும்போது, “இந்த விவகாரத்தில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் அது சம்பந்தப்பட்ட நீதிபதியின் நீதிமன்றப் பணிகளை பாதிக்கும் என்பதால் அதற்கு தடை விதிக்கும் விதிகள் அரசியல் சட்டத்தில் உள்ளன. நீதிபதிகள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும். நீதிபதிக்கு எதிரான அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர். அதை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன” என்றார்.
இதற்கு நீதிபதிகள், “இது துரதிருஷ்டவசமானது. இது தொடர்பாக நாங்கள் கவலை அடைந்துள்ளோம்” என்று தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலின் உதவியை கோரிய நீதிபதிகள் மனு மீதான அடுத்த விசாரணையை மே 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.- ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT