Published : 09 May 2024 04:42 PM
Last Updated : 09 May 2024 04:42 PM

சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்: இரு பெண்கள் புகார் வாபஸ்

சந்தேஷ்காலி போராட்டம் | கோப்புப் படம்.

கொல்கத்தா: சந்தேஷ்காலி சம்பவத்தில் ஒரு பெண்ணும், அவரது மாமியாரும் தங்கள் புகார்களை வாபஸ் பெற்றனர். தன்னைக் கட்டாயப்படுத்தி வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து பெற்று, அதில் ஏதோ எழுதிக் கொண்டனர். அதனால் புகாரை வாபஸ் பெறுவதாக அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக ஊடகங்களைச் சந்தித்த அந்த இரு பெண்களும் தாங்கள் பாலியல் வன்கொடுமை புகாரில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். மேலும் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு எதிரான புகாரை வாபஸ் பெற்றதால் தாங்கள் மிரட்டப்படுவதாக புதிய புகார் ஒன்றை போலீஸில் கொடுத்துள்ளனர்.

முன்னதாக, நேற்று சம்பந்தப்பட்ட பெண்ணும், அவரது மாமியாரும் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தனர். அப்போது, “நாங்கள் எந்த ஒரு போலி புகாரிலும் தொடர்புபடுத்தப்பட விரும்பவில்லை. எங்கள் பகுதியில் அக்கம்பக்கத்தினர் யாரும் எங்களிடம் பேசுவதில்லை. நாங்கள் போலி புகாரை ரத்து செய்யுமாறு கோரினால் காவல் துறையால் விரட்டப்படுகிறோம். எங்களிடம் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கினார். பிரதம மந்திரியின் ஊரக வேலை உறுதித் திட்டத்துக்காக கையெழுத்து வாங்குவதாகக் கூறினர். ஆனால், அது திரிணமூல் தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தவே என்பது எங்களுக்குத் தெரியாது” எனத் தெரிவித்திருந்தனர்.

மக்களவைத் தேர்தல் களத்தில் சந்தேஷ்காலி பிரச்சினையை பாஜக மிகப் பெரிய பிரச்சாரத் துருப்பாகப் பயன்படுத்தி வரும் சூழலில், இரண்டு பெண்கள் தாங்கள் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரையே வாபஸ் பெற்றுள்ளனர். இந்நிலையில், பாஜகவின் சுவேந்து அதிகாரி மற்றும் சிலர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை புகார் முழுவதுமாக பாஜகவால் புனையப்பட்டது என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

சந்தேஷ்காலி புகார் பின்னணி: மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி தீவுப் பகுதியை தன் முழு கட்டுப்பாட்டில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷேக் ஷாஜகான் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு இவரும் இவரது ஆதரவாளர்களும் வைத்ததுதான் சட்டம். இங்குள்ள பழங்குடியினரை மிரட்டி அவர்களின் நிலங்களை எல்லாம் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர். நிலம் தர மறுப்பவர்களின் நிலங்களில் கடல் நீரை லாரியில் கொண்டு வந்து பாய்ச்சுவர்.

ரேஷன் கடைக்கு வரும் பொருட்களை எல்லாம் மக்களுக்கு விநியோகிக்காமல் கடத்தி வந்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாதவர்கள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். பழங்குடியின பெண்களை தங்கள் கட்சி அலுவலகத்துக்கு இரவு நேரங்களில் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர் என அடுக்கடுக்காக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இவர்களுக்கு எதிராக போலீஸில் புகார் கொடுத்தாலும் எடுபடாது. ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்களின் அட்டூழியங்களை தாங்க முடியாமல் ரேகா பத்ரா என்ற பெண், சந்தேஷ்காலி கிராமத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தார். இந்த போராட்டம் நாட்டையே அதிர்ச்சியடைச் செய்தது.

இதையடுத்து ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைமறைவாகினர். கொல்கத்தா உயர் நீதிமன்றம் கெடு விதித்தால், ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆட்களை மேற்கு வங்க போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஷேக் ஷாஜகான் திரிணமூல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் சந்தேஷ்காலி வழக்கில் திடீர் திருப்பமாக இரு பெண்கள் புகாரை வாபஸ் பெற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x