Published : 05 Apr 2018 09:09 AM
Last Updated : 05 Apr 2018 09:09 AM

பொது விநியோகத் திட்டத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு உட்பட சிறுதானியங்களை சேர்க்க முடிவு: மத்திய வேளாண் துறை அமைச்சர் தகவல்

பொது விநியோகத் திட்டத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு உட்பட சிறுதானியங்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பொது விநியோகத் திட்டத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு போன்ற சிறு தானியங்களையும் சேர்க்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதன்பிறகு, அக்டோபர் மாதம் நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ்சந்த் தலைமையில் மத்திய வேளாண் துறைக்கான ஆலோசனைக் குழுவினர் கூட்டம் நடத்தி பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

அந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், சத்துள்ள தானியங்களை வழங்க வேளாண் துறை அமைச்சகம் முடிவு செய்தது. சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் வறட்சிப் பகுதிகளிலும், பருவநிலை மாற்றங்களையும் தாக்குப் பிடித்து வளரக் கூடியவை. குறைந்த தண்ணீரே தேவைப்படும். இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறியதாவது:

குறைந்தபட்ச ஆதார விலையில் சிறுதானியங்களை கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தில் வழங்க பிரதமர் மோடி அரசு முடிவு செய்தது. அதற்காக சிறுதானிய உற்பத்தியில் வேளாண் துறை அமைச்சகம் தீவிர கவனம் செலுத்தி புதிய திட்டங்களை தொடங்கி உள்ளது.

சிறுதானிய உற்பத்தியில் நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலம் முன்னிலையில் உள்ளது. தவிர ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் பயிரிடப்படுகின்றன.

சிறுதானியங்களை குறைந்த விலையில் ஏழைகளுக்கு, மதிய உணவு திட்டத்தில் வழங்குவதன் மூலம், மக்களின் உடல்நலம் மேம்படும். அத்துடன் சிறு விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கும்.

இவ்வாறு அமைச்சர் ராதா மோகன் சிங் கூறினார்.

மேலும், 2018-ம் ஆண்டை ‘தேசிய சிறுதானியங்கள் ஆண்டு’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x