Published : 06 May 2024 06:58 AM
Last Updated : 06 May 2024 06:58 AM

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள்: ராஜ்நாத் சிங் கருத்து

ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ராணுவத்தை பயன்படுத்த தேவையில்லை. அப்பகுதி மக்களே இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

ஏனெனில், ஜம்மு-காஷ்மீரில் மாறியுள்ள கள நிலவரம், பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதி திரும்பிய விதம் ஆகிய காரணங்களால், இந்தியாவுடன் இணைய வேண்டும் என்ற கோரிக்கை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் மத்தியில் தானாக ஏற்படும் என கருதுகிறேன். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் வரும் காலத்திலும் நம்முடனேயே இருக்கும்.

ஜம்மு காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறும். மேலும் காஷ்மீர் நிலவரம் மேம்பட்டு வருவதால் ஆயுதப்படை சிறப்பு அதிகாரசட்டத்தை திரும்பப் பெறுவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதாக கருதுகிறேன். இதுஎன்னுடைய தனிப்பட்ட கருத்து. இதுபற்றி உள்துறை அமைச்சகம்தான் முடிவு செய்யும்.

எல்லை தாண்டிய தீவிரவாத செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற அச்சுறுத்தலை தடுக்கவும் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டவும் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x