Published : 05 May 2024 05:44 PM
Last Updated : 05 May 2024 05:44 PM

எனக்கு குழந்தைகள் இல்லை; உங்கள் குழந்தைகளுக்காகவே உழைக்கிறேன்: நரேந்திர மோடி

எட்டாவா(உத்தரப்பிரதேசம்): தனக்கு குழந்தைகள் இல்லை என்றும், நாட்டு மக்களின் குழந்தைகளுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் எட்டாவா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், "10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு, உங்களிடம் ஆசி பெறுவதற்காக இன்று இங்கு வந்துள்ளேன். கடந்த பத்தாண்டுகளில் எனது கடின உழைப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். மக்களுக்கு சேவை செய்வதே எனது தர்மம். அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியா வலுவாக இருப்பதற்கான அடித்தளத்தை நான் தயார் செய்து வருகிறேன்.

சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் தங்களின் எதிர்காலத்திற்காகவும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் தேர்தலில் போட்டியிடுகின்றன. உத்தப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் எனக்கும் குழந்தைகளோ பொறுப்புகளோ இல்லை. எனவே நாங்கள், உங்கள் குழந்தைகளுக்காக உழைக்கிறோம்.

ஒரு கட்சி (சமாஜ்வாதி கட்சி) மைன்புரி, கன்னோஜ், எட்டாவாவை தங்களது பாரம்பரிய சொத்தாகக் கருதுகிறது. மற்றொரு கட்சி (காங்கிரஸ்) அமேதி, ரேபரேலியை தங்கள் பாரம்பரிய சொத்தாகக் கருதுகின்றது. ஆனால், ஏழைகளுக்கு நல்ல வீடு கட்டிக் கொடுப்பது, கோடிக்கணக்கான பெண்கள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கழிவறைகள், மின்சாரம், தண்ணீர், இலவச ரேஷன், இலவச சிகிச்சை, குழந்தைகளுக்கு புதிய கல்விக் கொள்கை இவையெல்லாம் கிடைக்கச் செய்வதே நான் உருவாக்கி இருக்கும் பாரம்பரியம்.

சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் தங்கள் குடும்பங்களுக்கும், தங்களது வாக்கு வங்கிகளுக்கும் நன்மை செய்ய மட்டுமே செயல்படுகின்றன. 2047ல் உங்கள் சொந்த மகனோ, மகளோ பிரதமராகவும், முதல்வராகவும் வருவார் என்பது யாருக்குத் தெரியும். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த நாட்டின் பிரதமராக வருவார்கள் என்ற கட்டுக்கதையை இந்த டீ விற்பனையாளன் உடைத்துவிட்டான்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x