Published : 22 Apr 2018 09:11 AM
Last Updated : 22 Apr 2018 09:11 AM

திருமணம் செய்ய பரோல் கேட்ட மும்பை தாதா அபு சலீமின் விண்ணப்பம் நிராகரிப்பு

திருமணம் செய்ய பரோலுக்கு அனுமதி கோரிய அபு சலீமின் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது.

மும்பையில் 1993-ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் கைதாகி ஆயுள் சிறைத்தண்டனை பெற்றவர் மும்பை தாதா அபு சலீம். இவர் நவி மும்பை பகுதியில் அமைந்துள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திருமணம் செய்ய விரும்பினார். இதற்காக 40 நாட்கள் பரோலில் செல்ல அனுமதி கோரி சிறை நிர்வாகத்திடம் சலீம் விண்ணப்பித்தார்.

தானே போலீஸ் நிலையத்துக்குட்பட்ட மும்ப்ரா பகுதியில் வசிக்கும் பெண்ணைத் திருமணம் செய்ய சலீம் விரும்பினார். இந்தத் திருமணம் மே 5-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது. சலீமுக்கு ஏற்கெனவே 2 முறை திருமணமாகியுள்ளது.

சலீமின் இந்த மனு கொங்கன் டிவிஷனல் கமிஷனருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அபு சலீமின் விண்ணப்பம் 3 நாட்களுக்கு முன்பு நிராகரிக்கப்பட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு ஒத்திவைப்பு

இதனிடையே அபு சலீம் மீதான கடத்தல் வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. சலீம் மீது 2002-ம் ஆண்டு கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அசோக் குப்தாவை ரூ.5 கோடி கேட்டு அபு சலீம் மிரட்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அபு சலீம் மிரட்டியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அபு சலீம் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். அரசு வழக்கறிஞர் தனது தரப்பு வாதத்தையும் எடுத்து வைத் தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை ஏப்ரல் 28-ம் தேதி வரை ஒத்திவைத்தார். - பிடிஐ / ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x