Published : 27 Apr 2024 07:43 PM
Last Updated : 27 Apr 2024 07:43 PM

‘பேரவைத் தேர்தலில் தோற்றதால் கர்நாடக மக்களை மோடி பழிவாங்குகிறார்’ - காங்கிரஸ்

பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி: கடந்த 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் தீர்மானமாக நிராகரிக்கப்பட்டதால், கர்நாடக மக்களை பிரதமர் மோடி பழிவாங்கும் எண்ணத்தில் உள்ளார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் தொடர்ச்சியாக, கடுமையான வறட்சிக்கு நிவாரணம் கோரிய கர்நாடக அரசுக்கு ரூ.3,499 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்திருக்கும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டு கவனம் பெறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 2023-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தீர்க்கமாக நிராகரிக்கப்பட்டதில் இருந்து மோடி தனது பழிவாங்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளார். முதலாவதாக, அன்ன பாக்கியா உணவு பாதுகாப்பு திட்டத்தை நாசம் செய்ய முயற்சி செய்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி அதற்கெல்லாம் அசராமல், 4.49 கோடி பயனாளர்களின் கணக்குகளில் நேரடியாக பணத்தை செலுத்தும் திட்டத்தை தொடங்கியது.

இரண்டாவதாக, அவர் கர்நாடகாவுக்கான நிதிகளை நிறுத்தினார். அவர் தோல்வியடைந்த ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2024 வரை கர்நாடகாவுக்கான மத்திய அரசின் நிதி 23 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மானியங்கள் 56 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக, மாநிலத்தின் விவசாயிகளுக்கு முறையாக வழங்க வேண்டிய வறட்சி நிவாரண நிதியை தாமதப்படுத்துகிறது.

கர்நாடகாவின் 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்கள் வறட்சியை சந்தித்துள்ளது, அதில் 196 தாலுகாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் ஆரம்பத்திலேயே வறட்சி நிவாரண நிதியாக ரூ.18,172 கோடி வழங்கக் கோரி கர்நாடகா அரசு, மத்தியில் ஆளும் மோடி அரசை அணுகியது. ஆனாலும், அது மாதக் கணக்காக தாமதம் செய்யப்பட்டது.

வறட்சி நிவாரணம் வழங்கத் தவறியதற்காக மோடி அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கர்நாடகா அரசு தொடர்ந்த நிலையில், இறுதியாக மத்திய நிதியமைச்சகம் கர்நாடகா விவசாயிகளுக்கு ரூ.3,499 கோடி வழங்க இன்று ஒப்புக்கொண்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மத்திய அரசு வறட்சி நிவாரண நிதியாக ரூ.3,499 கோடி வழங்க ஒப்புதல் அளித்து ரூ.3,454 கோடியை முதலில் வழங்கியுள்ளதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை தெரிவித்தார். மீதமுள்ள தொகையை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், மத்திய அரசை எச்சரித்து மாநிலத்துக்கு ஓரளவு வறட்சி நிவராண நிதி அளிக்கச் செய்ததற்காக உச்ச நீதிமன்றத்துக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x