Published : 08 Apr 2018 09:16 AM
Last Updated : 08 Apr 2018 09:16 AM

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தினமும் 1.5 லட்சம் பக்தர்களுக்கு இலவச உணவு

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தினமும் 1.5 லட்சம் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 33 ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தானம் இலவச உணவு வழங்கி வருகிறது.

ஆந்திர முதல்வராக என்.டி. ராமாராவ் இருந்தபோது, அவரது ஆலோசனைப்படி 1985-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. பின்னர் பக்தர்களின் உண்டியல் காணிக்கையை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டி மூலம் இத்திட்டம் காலை, இரவு ஆகிய இருவேளையும் செயல்படுத்தப் பட்டது.

இதைத்தொடர்ந்து இதற்காக தனி அறக்கட்டளையை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை என்ற பெயரில் இது செயல்படத் தொடங்கியது. இதற்கு நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து தினமும் காய்கறி இலவசமாக வழங்கப்படுகிறது.

தற்போது ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளையில் பக்தர்கள் ரூ.937 கோடி செலுத்தியுள்ளனர். இதனை அரசு வங்கிகளில் தேவஸ்தானம் டெபாசிட் செய்துள்ளது. இதன்மூலம் கிடைக்கும் வட்டியிலிருந்து இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2011-ல் திருமலையில் ரூ.33 கோடி செலவில் அன்னதானத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதனை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தொடங்கி வைத்தார். இதில் 4 மிகப்பெரிய அரங்குகள் உள்ளன. ஓர் அரங்கில் ஒரே நேரத்தில் 1,000 பக்தர்கள் வரை சாப்பிடலாம். இங்கு வடநாட்டு பக்தர்களுக்காக ரொட்டி, சப்பாத்தி, பருப்பு வகைகளும் தனியாக பரிமாறப்படுகிறது.

மேலும் இந்த அன்னதான திட்டத்தின் கீழ் திருமலையில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி, பால் போன்றவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது கோடைகாலம் என்பதால், மாட வீதிகள், சத்திரங்கள், பஸ் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் இலவச மோர் வழங்கப்படுகிறது.

மேலும் திருப்பதியில் பஸ் நிலையம், ரயில் நிலையம், தேவஸ்தான சத்திரங்களான விஷ்ணு நிவாசம், ஸ்ரீநிவாசம் போன்ற இடங்களிலும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும் பக்தர்களுக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இப்போது தினமும் சுமார் 1.5 லட்சம் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் இலவச உணவு வழங்கி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x