Published : 14 Apr 2024 10:33 AM
Last Updated : 14 Apr 2024 10:33 AM

பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி: நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும், இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பாஜகவின் முக்கிய வாக்குறுதிகள்:

  • நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தப்படும். அதையொட்டி, நாடு முழுவதும் பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்
  • 2036-ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்
  • 2025-ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்.
  • 70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும்
  • திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்
  • இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும்
  • மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.
  • முத்ரா கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.
  • ரேஷனில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்படும்.
  • ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
  • நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வந்தே பாரத் ரயில் கொண்டுவரப்படும்
  • திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும்
  • இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு என மூன்று திசைகளிலும் புல்லட் ரயில் சேவை கொண்டுவரப்படும்
  • புதிய வந்தே பாரத் மெட்ரோ ரயில்கள் தொடங்கப்படும்

தமிழுக்கு முக்கியத்துவம்: "உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்கள் நிறுவப்படும்" என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில், “இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும், யோகா, ஆயுர்வேதம், இந்திய மொழிகள், பாரம்பரிய இசை ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக, பயிற்சி அளிக்கும் விதமாகவும் உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்களை நிறுவுவோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் வளமான ஜனநாயக மரபுகளை ஜனநாயகத்தின் தாயாக நினைத்து மேம்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளது.

  • முக்கிய நாடுகளில் யோகா மற்றும் ஆயுர்வேத கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி அதற்கான படிப்புகளை வழங்க நடவடிக்கை.
  • இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை மீண்டும் இந்தியா கொண்டு வர நடவடிக்கை.
  • உலகெங்கிலும் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் இந்தியாவில் உள்ள செம்மொழிகளை கற்பிக்க நடவடிக்கை.
  • வெளியுறவுக் கொள்கை: ஐநா அமைப்பில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க முன்னெடுப்பு; பயங்கரவாதத்தை தொடர்ந்து எதிர்ப்போம்.

வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.14) வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் 14 முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளான இன்று தனது தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கைக்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 27 பேர் கொண்ட குழுவை பாஜக தலைமை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான பணிகள் ஜூன் 4 முதலே தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x