Last Updated : 21 Apr, 2018 12:37 PM

 

Published : 21 Apr 2018 12:37 PM
Last Updated : 21 Apr 2018 12:37 PM

சூரத் பலாத்காரம்: 87 காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியும், தாயும் ரூ.35,000க்கு கொத்தடிமைகளாக விற்பனையானது அம்பலம்

குஜராத் மாநிலம் சூரத்தில் உடலில் 87 காயங்களுடன், சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியும், அவரின் தாயும் ரூ.35 ஆயிரத்துக்குக் கொத்தடிமையாக விற்பனை செய்யப்பட்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சூரத்தின் புறநகர் பகுதியில் உள்ள நீரோடையில் கடந்த 6-ம் தேதி 11வயது மதிக்கத்தக்கச் சிறுமி உடலில் 87 இடங்களில் காயங்களுடன் சடலமாக சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். அந்த உடலைக் கைப்பற்றி போலீஸார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினார்கள். அதில் அந்தச்சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

ஏற்கெனவே காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தநிலையில், இந்தச் சம்பவம் நடந்ததால், பெரும் எதிர்ப்பலை உருவானது. இதையடுத்து, போலீஸார் விசாரணையைத் துரிதப்படுத்தினார்கள்.

அந்த விசாரணையில் கொல்லப்பட்ட சிறுமியும், அவரின் தாயும் ரூ.35 ஆயிரத்துக்கு கொத்தடிமையாகளாக டைல்ஸ், மார்பில் ஒட்டும் பணிக்காக அழைத்து வரப்பட்டனர் என்பது தெரியவந்தது. இவர்களை அழைத்துவந்த டைல்ஸ் ஒட்டும் ஒப்பந்ததாரர் ஹர்சாயாசி, ஹர்சிங் இருவரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில் அந்தச் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இது குறித்து சூரத் நகர போலீஸ் துணை ஆணையர் துணை ஆணையர் தீபன் பத்ரன் கூறியதாவது:

சூரத் நகரில் கடந்த 6-ம் தேதி ஓடையில் ஒரு சிறுமி சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடலில் 87 இடங்களில் காயங்கள் இருந்தன. உடற்கூறு ஆய்வில் அந்தச் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது, கடந்த 5-ம் தேதி ஒரு காரில் இருந்து மூட்டையைத் தூக்கி வீசுவதைக் கண்டுபிடித்தோம். அதன் அடிப்படையில் அந்த காரின் உரிமையாளராக இருக்கும் ராஜஸ்தானின் மதோபூர் மாவட்டம், கங்காபூரைச் சேர்ந்த ஹர்சாயி குர்ஜார்(35), அவரின் சகோதரர்கள் ஹரிசிங், நரேஷ், அமர்சிங் குர்ஜார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம்.

விசாரணையில் ஹர்சாய், ஹரிசிங் ஆகி இருவரும் சூரத் நகரில் மார்பில், டைல்ஸ் ஒட்டும் பணி ஒப்பந்ததாரர்கள். இவர்களுடன் நரேஷ், அமர்சிங் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் மார்ச் 15-ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம், கங்காபூரில் இந்த 11வயது சிறுமியையும், அவரின் தாயையும் ரூ.35 ஆயிரம் கொடுத்து பணிக்கு கொத்தடிமைகளாக அழைத்து வந்துள்ளனர்.

ஹர்சாயி, ஹரிசிங் ஆகியோர் சூரத்தில் தாங்கள் தங்கி இருக்கும் வீட்டின் அருகே இந்தச் சிறுமியையும், அவரின் தாயையும் தங்கவைத்துள்ளனர். அந்தச் சிறுமியின் தாயையும் ஹர்சாயியும், ஹரிசிங்கும் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

மார்ச் 20-ம்தேதிக்கு பின் அந்தச் சிறுமியின் தாய் திடீரென காணாமல் போய்விட்டார். ஆனால், கொலைசெய்ய முயற்சித்தோம் என்று இருவரும் வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.

அதன்பின் அந்த 11வயது சிறுமியை தங்களுடன் தங்கவைத்த ஹர்சாயி, ஹர்சிங்இருவரும் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து பல நாட்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.  இந்த விஷயத்தை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவோம் என அடிக்கடி கூறி அந்தச் சிறுமியை மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து, கடந்த 5-ம்தேதி அந்தச் சிறுமியை கழுத்தை நெறித்து கொலை செய்தனர். அந்த சிறுமியின் உடலை அவர்கள் வசிக்கும் வீட்டில் இருந்து 2 கிமீ.தொலைவில் உள்ள ஒரு ஓடையில் வீசினார்கள். இதற்கு அவர்கள் வைத்திருந்த காரில் சிறுமியின் உடலைக் கொண்டு சென்றனர்.

அவர்களின் கார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவானதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் சிக்கினார்கள்.

இதற்கிடையே கடந்த 10-ம் தேதி ஜியாவ்-புத்தியா சாலையில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவேளை இந்தச் சிறுமியின் தாயாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அது குறித்தும் இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது

இவ்வாறு போலீஸ் துணை ஆணையர் ஆணையர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x