Published : 28 Mar 2024 05:39 AM
Last Updated : 28 Mar 2024 05:39 AM

ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் காலமானார்: பிரதமர் மோடி, மம்தா இரங்கல்

கொல்கத்தா: ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் (94) கொல்கத்தாவில் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.

சுவாமி ஸ்மரணானந்தா 1929-ல் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் பிறந்தார். 1952-ல் தன்னுடைய 22-வது வயதில் ராமகிருஷ்ணா மடத்தில் இணைந்தார். நீண்ட காலமாக ஆன்மிக சேவையாற்றி வந்த அவர், 2017-ம் ஆண்டு ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷனின் 16-வது தலைவராக பொறுப்பேற்றார்.

கடந்த ஜனவரி 29-ம் தேதி சிறுநீரகத்தில் ஏற்பட்ட நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது.

அவரது மறைவு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “ஆன்மிகத்துக்கும் சேவைக்கும் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் சுவாமி ஸ்மரணானந்தா. எண்ணிலடங்களா இதயங்களில் தாக்கம் செலுத்தியவர். அவரது ஞானம் பல தலைமுறைக்கு ஊக்கமளிக்கும். பல வருடங் களாக அவருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.

2020-ல் பேலூர் மடத்திற்கு சென்று நான் அவருடன் உரையாடியதை நினைவு கூர்கிறேன். சில வாரங்களுக்கு முன்பு, கொல்கத்தாவில் மருத்துவமனைக்குச் சென்று அவரிடம் உடல்நலம்விசாரித்தேன். அவருடைய பக்தர்களுக்கு என் ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது இரங்கல் பதிவில், “ஸ்மரணானந்தா மகராஜ் மறைவு செய்தி மிகுந்தவருத்தத்தைத் தந்தது. அவரது மறைவால் வாடும் அவரது பக்தர்களுக்கும் சக துறவிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x