Published : 28 Mar 2024 05:19 AM
Last Updated : 28 Mar 2024 05:19 AM

பிரதமரின் நாடகங்கள் மக்களுக்கு புரியும்: ஸ்ரீவில்லிபுத்தூர் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக கூட்டணி கட்சிகளின் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன் விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: தேர்தல் வருவதால்தான் சிலிண்டர், பெட்ரோல் விலையை பிரதமர் குறைத்துள்ளார். அவரது தேர்தல் நாடகங்களை மக்கள் புரிந்துவைத்துள்ளதால் யாரும்அவரை நம்பவில்லை என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்,தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறோம். அந்த வகையில் உங்கள் குடும்பங்களில் ஒருவன் என்ற முறையில் உரிமையோடு வாக்கு கேட்க வந்துள்ளேன்.

பட்டாசுக்கு ஜிஎஸ்டி வரி போட்டது மத்திய அரசு. சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்தியில் புதிய அரசு அமைந்ததும் சீன பட்டாசுக்கு தடை விதிக்கப்படும்.

திமுகவின் அடிப்படை கொள்கை சமூக நீதி. காமராஜர் ஆட்சி சமூக நீதி ஆட்சியாக இருந்தது. அரசியல் சட்டத் திருத்தம் உருவாக காரணமான இயக்கம் திராவிட இயக்கம். அத்தகைய இடஒதுக்கீடு, சமூக நீதிக்குஆபத்தை உருவாக்கும் கட்சி பாஜக. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முன்னேறுவதை காலம்காலமாக தடுத்தவர்கள், இப்போதும் தடுக்கிறார்கள்.

அதற்கு குலக்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை, ஏழை, எளியவர்களை படிப்பதை பறிக்க நீட் தேர்வு, மத்திய அரசுப் பணிகளில் தமிழ் புறக்கணிப்பு, இந்தி, சம்ஸ்கிருதம் திணிப்பு என நமது பிள்ளைகளின் வேலைவாய்ப்புகளை பறிக்கின்றனர். நாம் முன்னேறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரி பாஜக.

வரலாறு காணாத ஊழலை மறைக்க இ.டி. (அமலாக்கத் துறை), ஐ.டி (வருமான வரித் துறை), சிபிஐ என கூட்டணி அமைத்துள்ளனர். பாஜகவை ஆட்டம்காண வைக்கும் இமாலய ஊழலான தேர்தல் பத்திரம் வெளிவந்திருக்கிறது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திர ஊழல், உலகத்திலேயே பெரிய ஊழல்.

தமிழ்நாட்டுக்கு, தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளார் பிரதமர் மோடி. ஆனால், வாக்கு கேட்க மட்டும் தமிழகம் வருகிறார்.

தேர்தல் வந்துவிட்டால் மக்கள் மீது அவருக்கு கரிசனம் வரும்.அதனால்தான் தற்போது சிலிண்டர், பெட்ரோல் விலையை குறைத்துள்ளார்.

பிரதமரின் தேர்தல் நாடகங்களை மக்கள் புரிந்துவைத்துள்ளதால் யாரும் அவரை நம்பவில்லை. அதனால், மக்களை நம்பவைக்க ‘மோடியின் கேரன்ட்டி’ என விளம்பரம் செய்கிறார். அவரது வாக்குக்கு கேரன்ட்டியும் இல்லை. வாரன்ட்டியும் இல்லை.

அப்படிப்பட்ட பிரதமர், ஆளுநர் பாஜக பற்றி முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசுவதே இல்லை. தமிழகத்தை வஞ்சித்த பாஜகவையும், பாழ்படுத்திய அதிமுகவையும் ஒருசேர வீழ்த்த வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, திமுக மற்றும் கூட்டணி கட்சிவேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x