Published : 27 Mar 2024 02:37 PM
Last Updated : 27 Mar 2024 02:37 PM

“எனது கணவர் நாளை நீதிமன்றத்தில் ஆதாரங்களோடு உண்மையை வெளியிடுவார்” - சுனிதா கேஜ்ரிவால்

சுனிதா கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் நாளை (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா தெரிவித்தார். முன்னதாக, அரவிந்த் கேஜ்ரிவாலை சுனிதா செவ்வாய்க்கிழமை மாலை அமலாக்கத் துறை அலுவலகத்தில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சுனிதா கேஜ்ரிவால் கூறுகையில், “இரண்டு நாட்களுக்கு முன்பு, அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியின் தண்ணீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினை தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் அதிஷிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். மத்திய அரசு அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்கள் டெல்லியை அழிக்க நினைக்கிறார்களா? மக்கள் தொடர்ந்து துன்பத்தில் தவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா என்ன?. இந்த வழக்கால் அரிவிந்த் கேஜ்ரிவால் மிகவும் வேதனை அடைந்துள்ளார்.

மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை சுமார் 250-க்கும் அதிமான சோதனைகளை நடத்தியுள்ளது. ஊழல் எனச் சொல்லி அவர்கள் பணத்தைத் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எதையும் கண்டுபிடிக்கவில்லை. அரவிந்த் கேஜ்ரிவால் மார்ச் 28-ம் தேதி (நாளை) நீதிமன்றத்தில் அனைத்தையும் வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்தார். மதுபான ஊழல் வழக்கின் பணம் எங்கே சென்றது என்பதைத் தெரிவிப்பார். அனைத்து ஆதாரங்களையும் அளிப்பார்” இவ்வாறு சுனிதா கேஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மார்ச் 21ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவரை மார்ச் 28ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்திருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு தற்போது கைவிடப்பட்டுள்ள டெல்லி புதிய மதுபான கொள்கையை செயல்படுத்துவதில் முறைகேடுகளும் பணமோசடி நடந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் எஃப்ஐஆரில் அரவிந்த் கேஜ்ரிவாலின் பெயர் இல்லை என்றாலும் மதுபான கொள்கை விவகாரத்தில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சதி செய்ததாக குற்றப்பத்திரிகையில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அனுப்பிய 8 சம்மன்களையும் கேஜ்ரிவால் நிராகரித்த நிலையில் அமலாக்கத் துறை அவரை கைது செய்ததது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x