Published : 27 Mar 2024 01:36 PM
Last Updated : 27 Mar 2024 01:36 PM

சத்தீஸ்கர் | பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 6 நக்சல்கள் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப்படம்

பிஜாப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் இன்று (புதன்கிழமை) பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர், பலர் காயமடைந்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பஸ்தர் பகுதி காவல்துறை ஐஜி சுந்தரராஜ் கூறுகையில், “பசகுடா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சிக்கூர்பட்டி மற்றும் புஸ்பகா கிராமங்களின் வனப்பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது” என்றார்.

மாவட்ட ரிசர்வ் கார்டு (டிஜிஆர்), மத்திய பாதுகாப்புப் படை, மற்றும் அதன் உயர் அமைப்பான கோப்ரா (Commando Battalion for Resolute Action) ஆகியோர் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் என்று போலீஸாரின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு பின்னர் போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றினர். கூடவே ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், அன்றாட பயன்பாட்டு பொருள்களையும் கைப்பற்றினர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

துப்பாக்கிச் சூடு நடந்துள்ள பகுதி, வரும் மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள பஸ்தார் தொகுதியின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சத்தீஸ்கரில் ஆட்சி மாற்றம் நடந்ததைத் தொடர்ந்து இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஸ்தார் பகுதியில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சுமார் 30-க்கும் அதிமான மவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x