Last Updated : 19 Mar, 2024 06:20 PM

 

Published : 19 Mar 2024 06:20 PM
Last Updated : 19 Mar 2024 06:20 PM

‘யானையை விரட்டுவோம்... புலியை துரத்துவோம்... - கேரளாவில் கவனம் ஈர்க்கும் தேர்தல் வாக்குறுதிகள்

மூணாறு கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் கடந்த வாரம் கூட்டமாக முகாமிட்டிருந்த யானை கூட்டம்.

மூணாறு: இடுக்கி தொகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானை, புலி, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகளால் பொதுமக்களுக்கு உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே இவற்றை காட்டுக்குள் துரத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று பிரதான கட்சிகள் அங்கு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.

தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. இது கேரளாவின் மிகப் பெரிய மக்களவைத் தொகுதியாகும். உடும்பஞ்சோலை, தொடுபுழா, தேவிகுளம், இடுக்கி, பீர்மேடு, மூவாற்றுப்புழா, கோதமங்கலம் என்று 7 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது.

இடுக்கி மாவட்டத்தைப் பொறுத்தளவில் பெருநிறுவனங்களின் தேயிலை தோட்டங்களே அதிகம் உள்ளன. பிரிட்டிஷ் காலத்தில் இங்கு வேலை செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுக்கு தேயிலை தோட்ட நிர்வாகங்களே குடியிருப்பு, தண்ணீர், மின்சாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளது.

இருப்பினும் ரேஷன், போனஸ், பணியாளர் வருங்கால வைப்பு நிதி, கூலி நிர்ணயம் போன்றவற்றில் அரசின் பங்கும் இருந்து வருகிறது. பணி ஓய்வு வரை இங்கிருந்துவிட்டு பிறகு பூர்வீக ஊர்களுக்கு செல்லும் நிலையே உள்ளது. இதனால் வாழ்வின் பெரும்பாலான காலம் தோட்ட நிர்வாகங்களை சார்ந்தே இவர்களின் வாழ்க்கை உள்ளது.

புலம்பெயர் பூர்வீக தொழிலாளர்களான இவர்களுக்கு அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் பெரியளவில்கூட மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. தற்போது இவர்களுக்கு உள்ள பிரதான பிரச்சினையே வனவிலங்குகள்தான். வேலைபார்க்கும் தோட்டம், தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் யானை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளால் இவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இவர்கள் வளர்க்கும் கால்நடைகளை தாக்கி கொல்லும் விலங்குகள் சில நேரம் தொழிலாளர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் தற்போதைய தேர்தலில் பல கட்சிகளும் யானைகளை வனத்துக்குள் விரட்டவும், புலி, காட்டெருமை போன்ற விலங்குகள் தோட்டப்பகுதிகளுக்குள் வராத அளவுக்கு வனத்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் வாக்குறுதியை அளித்து வருகின்றன.

இதேபோல் பல தலைமுறைக்கு முன்பு இங்கு வந்த தொழிலாளர்களின் நிலங்களுக்கு பட்டா இல்லாத நிலை உள்ளது. இவற்றையும் நிறைவேற்றித் தருவதாக இங்கு போட்டியிடும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி(யுடிஎப்), இடதுசாரி கூட்டணி (எல்டிஎப்) மற்றும் பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளன.

இதுகுறித்து கேரளாவைச் சேர்ந்த கட்சியினர் கூறுகையில், "மலைப்பகுதி என்பதால் இதுபோன்ற வாக்குறுதிகளை வாக்காளர்களுக்கு அளித்து வருகிறோம். சமதளப்பகுதி மற்றும் பெருநகரங்களில் வசிக்கும் மற்றவர்களுக்கு இது வித்தியாசமாக தெரியலாம். அதேபோல் தமிழகத்தில் உரிமைத் தொகை, பல்வேறு இலவச திட்டங்கள் இங்குள்ளவர்களுக்கு வித்தியாசமாக தெரிகிறது. அந்தந்த வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப கட்சியினர் தேர்தல் வாக்குறுதி அளிப்பது சகஜம்தான்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x