Published : 10 Mar 2024 02:29 PM
Last Updated : 10 Mar 2024 02:29 PM

‘சுதந்திர அமைப்புகளின் அழிவு நிறுத்தப்படாவிட்டால்...’: காங்கிரஸ்   எச்சரிக்கை @ அருண் கோயல் ராஜினாமா 

புதுடெல்லி: தேர்தல் ஆணையர் அருண் கோயலின் ராஜினாமா குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, சுதந்திரமான அமைப்புகளின் திட்டமிட்ட அழிவு தடுத்து நிறுத்தப்படாவிட்டால் சர்வாதிகாரத்தால் ஜனநாயகம் பறிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை சனிக்கிழமை ராஜினிமா செய்தார். அவரது பதவிக்காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில் திடீரென அவர் ராஜினாமா செய்துள்ளது தேசிய அளவில் அரசியல் சூழலை பரபரப்பாக்கியுள்ளது. அவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாகவும், ஞாயிற்றுக்கிழமை முதலே அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘எலக்ஷன் கமிஷனா அல்லது எலக்ஷன் ஒமிஷனா’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். தனது தனது எக்ஸ் தள பதிவில் அவர், "இன்னும் சில நாட்களில் மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ள நிலையில், இந்தியாவில் தற்போது ஒரே ஒரு தேர்தல் ஆணையர் தான் உள்ளார். ஏன்?.

நமது சுதந்திரமான அமைப்புகளின் திட்டமிட்ட அழிவுகளை தடுத்து நிறுத்தாவிட்டால், சர்வாதிகாரத்தால் நமது ஜனநாயகம் பறிக்கப்படும். கடைசியாக வீழ்ச்சியடைந்த அரசியலமைப்பு நிறுவனங்களில் இந்திய தேர்தல் ஆணையமும் இப்போது இருக்கும்.

தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் புதிய நடைமுறை, ஆளுங்கட்சிக்கும், பிரதமருக்கும் அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. இந்த நிலையில், ஒரு தேர்தல் ஆணையரின் பதவிக் காலம் முடிவடைந்து 23 நாட்களாகியும் ஏன் இன்னும் புதிய ஆணையர் நியமிக்கப்படவில்லை? மோடி அரசு இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நிச்சயம் பதிலளிக்க வேண்டும், மேலும் முறையான விளக்கமளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால், "மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்திருப்பது, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தில் ஆழந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் போன்ற அரசியல்சாசன அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் அரசு அதன்மீது அழுத்தம் கொடுக்கிறதா என்பது குறித்து எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை.

கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின் போது அசோக் லவாசா, பிரதமர் மோடி தேர்தல் நடைமுறைகளை மீறினார் என்பதற்காக அவருக்கு க்ளீன் சிட் வழங்குவதற்கு எதிராக கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். பின்னர் அசோக் தொடர்ச்சியான விசாரணைகளை எதிர்கொண்டார்.

இந்த அணுகுமுறை ஜனநாயக மரபுகளை அழிப்பதில் அரசின் அதிகாரத்தை காட்டுகிறது. இதுகுறித்து விளக்கமளிக்கப்பட வேண்டும். மேலும், இந்தியத் தேர்தல் ஆணையம் எப்போதும் பாரபட்சமின்றி இருக்கவேண்டும்" என்று தனது எக்ஸ் பக்கதில் பதிவிட்டுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., சாகேத் கோகாய் கூறுகையில், "திடீர் நடவடிக்கையாக, தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். மற்றொரு தேர்தல் ஆணையரின் பதவியும் காலியாக உள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்தில் தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவர் மட்டுமே இருக்கிறாா்.

பிரதமர் மோடி மற்றும் அவரால் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர் ஒருவரின் பெரும்பான்மை வாக்குகளுடன் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் புதிய சட்டத்தின் மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

எனவே, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்த ராஜினாமா நடவடிக்கையைத் தொடர்ந்து மூன்று தேர்தல் ஆணையர்களில் இரண்டு பேரை மோடி நியமிக்க உள்ளார். இது மிக மிக கவலையளிக்கக் கூடிய ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தனது எக்ஸ் தள பதிவொன்றில், "தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார். ஆமாம் சாமி போடு நபர்களால் தேர்தல் ஆணையம் நிரப்பப்பட வழி செய்யப்பட்டுள்ளது. இது நமது குடியரசின் அடிப்படையான அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும்" என்று தெரிவித்துள்ளார்.

யார் இந்த அருண் கோயல்? - பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 1985-ம் ஆண்டு ஐஎஸ்எஸ் அதிகாரி அருண் கோயல். இவர் மத்திய அரசு செயலாளராக பணியாற்றியவர். மத்திய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியிலிருந்து இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் இவர் கனரக தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் விருப்ப ஓய்வு பெற்ற இவர் கடந்த 2022 நவம்பரில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

தற்போது அவர் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் கூறி இருக்கிறார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுகொண்டதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x