Published : 10 Mar 2024 10:41 AM
Last Updated : 10 Mar 2024 10:41 AM

“பாஜகவை எதிர்த்து நில்லுங்கள்; வயநாடு வேண்டாம்” - ராகுலுக்கு டி.ராஜா அறிவுறுத்தல்

டி.ராஜா, ராகுல் காந்தி

கேரளாவின் வயநாடு தொகுதியில் இண்டியா கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டார். இத்தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, ராகுலுக்கு சவாலாக உள்ளார்.

இதனால், இங்கு ராகுலை களம் இறக்க வேண்டாம் என நினைத்த காங்கிரஸ் கட்சி, மீண்டும் அவரை வயநாடு தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இது குறித்து டி.ராஜா கூறியதாவது: கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதியில் வயநாடு ஒன்று. அங்கு எங்கள் வேட்பாளரை அறிவித்து விட்டோம். இந்நிலையில் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். ஆனால் ராகுல் காந்தி ஒரு மாநிலத்தைச் சேர்ந்த தலைவர் அல்ல. அவர் தேசிய தலைவர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர். அவரைப் போன்ற முக்கியமான தலைவர்கள், வேறு ஏதாவது தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து நேரடியாக போட்டியிட வேண்டும்.

டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா

வயநாடு தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் அவர் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்? தங்களின் முக்கிய இலக்கு பாஜகவா அல்லது கம்யூனிஸ்ட் கட்சியா என்பதை ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் சுய பரி சோதனை செய்ய வேண்டும். இவ்வாறு டி.ராஜா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x