Published : 09 Feb 2018 06:23 PM
Last Updated : 09 Feb 2018 06:23 PM
புதுடெல்லியில் நாளை நடைபெற உள்ள குத்துச்சண்டைப் போட்டியில் தான்சானியா வீரர் சாதிக்கி மொம்பாவுடன் காமன்வெல்த்தில் தங்கம்வென்ற அகில் குமார் மோத உள்ளார்.
ஐஓஎஸ் பாக்ஸிங் புரமோஷனில் பங்கேற்று விளையாடி வந்த அகில் குமார் கடந்த ஓராண்டு காலமாக குத்துச்சண்டையிலிருந்து விலகி இருந்தார். ஒப்பந்தம் சார்ந்த சில கருத்துவேறுபாடுகளால் அவர் விலகியதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் ஹோப் அன்ட் குளோரி பாக்ஸிங் அமைப்போடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்போட்டியில் இன்னும் சிலரும் பங்கேற்க உள்ளனர். அகில் குமாரின் மாணவர் ஜிதேந்தர் குமார், இவரும் விளையாட்டிலிருந்து ஒதுங்கியே இருந்தவர் இப்போட்டியில் களமிறங்குகிறார்.
மேலும் நாளைய போட்டியில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் பிரிஜேஷ் குமார் மீனா, மஹாராஷ்டிராவின் குத்துச்சண்டை புதிய வீரர் சித்தார்த்தா வர்மா இவர்களுடன் மகளிர் பிரிவில் பிரீத்தி தியா, ரூபிந்தர் கவுர் மற்றும் ராஷ்மி கோர் ஆகிய குத்துச்சண்டை வீராங்கனைகளும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
தான்சானியா நாட்டைச் சேர்ந்த சாதிக்கி மொம்பாவுடன் மோத உள்ளது குறித்து இன்றைய பயிற்சியில் முடித்த கையோடு அகில் குமார் தெரிவித்ததாவது:
சாதிக்கி மொம்பா அனுபவமிக்க ஒரு குத்துச்சண்டை வீரர், கலந்துகொண்ட 37 போட்டிகளில் 25 முறை வென்று சாதித்தவர். நானோ குறுகிய கால அனுபவமே பெற்றவன். ஆனால் நாளை சிறப்பாகவே செயல்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்றார்.
அகில் குமார் மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றவர். காமன்வெல்த் குத்துச்சண்டை சாம்பியனாக தங்கம் வென்றவர் என்பதால் நாளை இந்தியாவின் சார்பாக தான்சானியா வீரரோடு மோத உள்ளது குத்துச்சண்டை ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT