Published : 13 Feb 2018 11:39 AM
Last Updated : 13 Feb 2018 11:39 AM

ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை

 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை இன்று தொடங்குகிறது. ஆறு மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த ரத யாத்திரை ராமேஸ்வரத்தில் நிறைவடைகிறது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி 1990-ம் ஆண்டு இயக்கம் பெரிய அளவில் நடந்தது. அப்போதைய பாஜக தலைவர் அத்வானி தலைமையில் இதற்காக ரத யாத்திரையும் நடந்தது. பின்னர் 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு, நாடு முழுவதும் பெரும் கலவரம் நடந்தது.

அயோத்தி ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் தொடர்ந்து இயக்கம் நடத்தி வரும் நிலையில், அங்கு நில உரிமை தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் ராமர் கோயில் தொடர்பான விழிப்புணர்வுக்காக, விஸ்வ இந்து பரிஷத் ஆதரவுடன் மீண்டும் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று இந்த யாத்திரை தொடங்குகிறது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த யாத்திரை ஆறு மாநிலங்கள் வழியாக பயணம் செய்யும். மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வந்து, இந்த யாத்திரை மார்ச் மாதம் இறுதியில் ராமேஸ்வரத்தில் முடிவடைகிறது

அயோத்தியில் ராமர் கோயிலுக்கான சிலைகள் மற்றும் தூண்கள் வடிவமைக்கப்பட்டு வரும் கர்சேவகபுரத்தில் இருந்து யாத்திரை தொடங்குகிறது. இதற்காக ராமர் ரதம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து யாத்திரை ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ''அரசியல் நோக்கத்திற்காகவோ, பாஜகவிற்கு ஆதரவு திரட்டுவதற்காகவோ இந்த யாத்திரை நடைபெறவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இதற்காக அனைத்து தரப்பு மக்களிடமும் ஆதரவு திரட்டும் நோக்கத்துடனும் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது'' எனக் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x