Published : 28 Feb 2018 08:33 AM
Last Updated : 28 Feb 2018 08:33 AM
கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பிரச்சார வியூகம் வகுத்த பிரஷாந்த் கிஷோர், மீண்டும் வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைய உள்ளார்.
ஐஐடி, ஐஐஎம் போன்ற பிரபல கல்வி நிறுவனங்களில் பயின்ற இளைஞர்களுடன் ஒரு குழு அமைத்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைப்பவர் பிரஷாந்த் கிஷோர். இவர் கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்காக முதல்முறையாக பிரச்சார வியூகம் வகுத்துக் கொடுத்தார். ‘ஹர் ஹர் மோடி, கர் கர் மோடி’ என்பது உட்பட இவர் அமைத்துக் கொடுத்த பல்வேறு கோஷங்கள் மக்களைக் கவர்ந்தன. இதனால் பாஜக வெற்றியின் பின்னணியில் பிரஷாந்த் பரபரப்பாகப் பேசப்பட்டார்.
ஆனால் அடுத்து வந்த பிஹார் தேர்தலில் பிரஷாந்தை முதல்வர் நிதிஷ்குமார் தனது பக்கம் இழுத்து, மெகா கூட்டணிக்கு பிரச்சார வியூகம் வகுக்கச் செய்தார். இதில் மெகா கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. அடுத்து அவரை உ.பி. மற்றும் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸுக்காக ராகுல் காந்தி ஒப்பந்தம் செய்தார்.
இந்நிலையில் வரும் 2019 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர முயன்று வருவதால், இதை சமாளிக்க பிரதமர் மோடி மீண்டும் பிரஷாந்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாஜக தேசிய நிர்வாகிகள் கூறும்போது, ‘பிரஷாந்த் இல்லாமல் எங்களுக்கு குஜராத்தில் வெற்றி பெறுவது சிக்கலாக இருந்தது. இதை உணர்ந்தமையால் அவர் பிரதமர் மோடிக்காக மீண்டும் இணைய உள்ளார். இதற்கான ஏற்பாட்டை எங்கள் கூட்டணியில் மீண்டும் இணைந்த நிதிஷ்குமார் செய்துள்ளார்” என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே, நிதிஷ்குமார் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.சி.தியாகி நேற்று டெல்லியில் தேநீர் விருந்து நடத்தினார். இதில் பல்வேறு பத்திரிகை மற்றும் சேனல்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற பிரஷாந்த், பாஜகவில் தனது மறு வருகை குறித்து கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கான பிரச்சாரத்தில் தனக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதுடன் செலவுத்தொகைக்கும் ஒப்புதல் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT