Published : 10 Feb 2018 07:32 AM
Last Updated : 10 Feb 2018 07:32 AM

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: மார்ச் 5 வரை மக்களவை ஒத்திவைப்பு- தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் எம்.பி.க்கள் கடும் அமளி

முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. மக்களவை மார்ச் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ம் தேதி தொடங்கியது. அன்று மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் உரையாற்றினார். அதன்பின் மக்களவை, மாநிலங்களவையில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து மக்களவையை மார்ச் 5-ம் தேதி வரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

முன்னதாக மக்களவை நேற்று காலை கூடியதும், ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் அவர்கள் மக்களவையில் கூச்சல் போட்டனர். தெலுங்கு தேசம் உறுப்பினர் என்.சிவப்பிரசாத், பெண்களின் கூந்தல் போல் ‘விக்’ வைத்துக் கொண்டு திடீரென நூதன முறையில் போராட்டம் நடத்தினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கூச்சல் குழப்பம் நிலவியதால் கேள்வி நேரத்தின் போது அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் அவை கூடிய போதும் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்களும், ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகாருக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மக்களவை மார்ச் 5-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அவை ஒத்திவைக்கப்பட்டதும் பாஜக மூத்த தலைவர் அத்வானியிடம் சென்று தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில், ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்காவிட்டால், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு 2 நாளில் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x