Published : 23 Feb 2024 06:01 AM
Last Updated : 23 Feb 2024 06:01 AM

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 7-வது முறையாக கேஜ்ரிவாலுக்கு சம்மன்

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு அமல்படுத்தியது. இதில் ஊழல் நடந்ததாகவும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உட்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சார்பில் ஏற்கெனவே 6 முறை சம்மன்கள் அனுப்பப்பட்டன. ஆனால், இந்த சம்மன் சட்டவிரோதமானது எனக் கூறி வரும் கேஜ்ரிவால் இதுவரை ஆஜராகவில்லை.

இந்நிலையில், கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சார்பில் 7-வது முறையாக நேற்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில், புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்காக வரும் 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது.

சம்மனை ஏற்று ஆஜராகாத கேஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதுவரும் மார்ச் 16-ம் தேதி விசாரணைநடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x