Last Updated : 22 Feb, 2024 11:23 AM

12  

Published : 22 Feb 2024 11:23 AM
Last Updated : 22 Feb 2024 11:23 AM

எத்தனை கன்னடர்கள் வேலை செய்கின்றனர்? - எம்என்சி நிறுவனங்களுக்கு க‌ர்நாடகா புதிய விதி

சிவராஜ் த‌ங்கடகி

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் கன்னட ஊழியர்களின் எண்ணிக்கையை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என அம்மாநில கன்னட கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி தெரிவித்தார்.

கர்நாடக சட்டப்பேரவையில் கன்னட வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி நேற்று பேசியதாவது: கர்நாடகாவில் உள்ள நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகளின் பெயர்ப் பலகைகளில் 60 சதவீதம் கட்டாயம் கன்னடத்தில் எழுதி இருக்க வேண்டும். இது தொடர்பாக கர்நாடக அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கன்னட மொழி மற்றும் கன்னடர்களின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் கன்னடர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதனை கண்காணிக்கும் பணியில் அரசு இறங்கியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் கன்னட ஊழியர்களின் எண்ணிக்கையை அந்தந்த நிறுவனங்கள் தங்களது அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களில் கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் சில கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்துள்ளனர். அதன்படி சில விதிமுறைகளை இயற்றி, கன்னடர்களுக்கு உகந்த சூழலை உருவாக்க இருக்கிறோம்.

கன்னட மொழியின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இணங்க தவறினால், அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படும். கன்னடர்கள் மற்றும் கன்னட மொழியின் நலனுக்கு எதிராக செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து 'கன்னட காவல்' என்ற செல்போன் செயலி மூலம் புகார் அளிக்கலாம். இவ்வாறு சிவராஜ் த‌ங்கடகி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x