Published : 21 Feb 2024 03:25 PM
Last Updated : 21 Feb 2024 03:25 PM

“விவசாயிகள் செய்த தவறுதான் என்ன?” - மத்திய அரசுக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி

டெல்லிக்குள் நுழைய விடாமல் விவசாயிகளை தடுக்க பஞ்சாப் - ஹரியாணா எல்லை பகுதிகளில் 8 அடுக்கு பாதுகாப்பு.

புதுடெல்லி: டெல்லி நோக்கிய பேரணியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் என்று நாங்கள் வெளிப்படையாகக் கூறி இருக்கிறோம். விவசாயிகளின் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்படியான உத்தரவாதமாக இருக்க வேண்டும். எங்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் இதை கூற இருக்கிறோம். அனைத்து விளைபொருட்களுக்கும் இல்லாவிட்டலும், அத்தியாவசிய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையையாவது சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

‘கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என வாக்குறுதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, அதற்காக எதையும் செய்யாதது ஏன்?’ என்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2014 மக்களவைத் தேர்தலின்போது விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என பிரதமர் மோடி கூறினார். தற்போது விவசாயிகள் செய்த தவறுதான் என்ன? தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலையை விவசாயிகள் பெற முடியாதது ஏன்?

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என மோடி கூறி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. எதுவும் நடக்கவில்லை. தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அரசு அவர்களோடு பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்க அரசு இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை" என குற்றம் சாட்டினார்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்று மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான்காவது சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னர், எம்எஸ்பி கோரிக்கை, பயிர் பல்வகைப்படுத்துதல்,பயிர் கழிவுகளை எரித்தல், வழக்குகள் போன்ற அனைத்து பிரச்சினைகள் குறித்தும் 5-வது சுற்றில் பேச அரசு தயாராக இருக்கிறது. விவசாயத் தலைவர்களுக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நான் அழைப்பு விடுக்கிறேன். அமைதியை பேணுவதற்கு இது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் ‘டெல்லி சலோ’ பேரணியை இன்று மீண்டும் தொடங்கியபோது, அதைத் தடுத்து நிறுத்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை ஹரியாணா போலீஸார் வீசினர். இதனால் மீண்டும் அங்கு பரபரப்பு சூழல் நிலவுகிறது. விரிவாக வாசிக்க > கண்ணீர் புகை குண்டுகள் வீசிய ஹரியாணா போலீஸ்: டெல்லி நோக்கிய விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்

கோரிக்கைகள் என்னென்ன? - வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளின்படி 23 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும். இதை உறுதி செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

250 விவசாய சங்கங்கள்: பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 250 விவசாய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்று உள்ளன. ஆயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாபில் இருந்து தலைநகர் டெல்லியை நோக்கி பேரணியாக செல்கின்றனர். அவர்கள் பஞ்சாப் - ஹரியாணா எல்லைப் பகுதியான ஷம்புவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு சார்பில் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் கடந்த 18-ம் தேதி 4 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, “விவசாயிகளின் கோரிக்கை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. மத்தியில் புதிய அரசு அமைந்த பிறகு விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். இப்போதைக்கு பருத்தி, சோளம், துவரை, உளுந்து, மசூர் பருப்பு ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்ய உறுதி அளிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து கிஷான் மஸ்தூர் மோர்ச்சா சங்கத்தின் தலைவர் ஷிரவன் சிங் பாந்தர், பாரதியகிஷான் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறும்போது, “குறிப்பிட்ட 5 பயிர்களுக்கு மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து அதன் அடிப்படையில் கொள்முதல் செய்ய மத்திய அரசு சில பரிந்துரைகளை முன்வைத்தது. இதை நிராகரிக்கிறோம்” என்றனர்.

உயர் நீதிமன்றம் கண்டிப்பு: விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) சந்த்வாலியா, நீதிபதி லபிதா பானர்ஜி அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சந்த்வாலியா கூறும்போது, “போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு உரிமை உள்ளது. ஆனால் டிராக்டர், டிராலிகள் மூலம் சாலையை ஆக்கிரமிக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பஞ்சாப் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x