Published : 18 Feb 2018 02:38 AM
Last Updated : 18 Feb 2018 02:38 AM
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்ததால் கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
அதில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவை குறைத்தும், கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி நீரை ஒதுக்கியும் உத்தரவிட்டது.
இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில், “காவிரி நீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளது.
இந்த தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மறுபரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் பெங்களூரு, மண்டியா, சென்னபட்னா உள்ளிட்ட இடங்களில் ரஜினியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், தமிழகத்துக்கு ஆதரவாக பேசிய ரஜினிகாந்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் ரஜினிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர், அவரது உருவ பொம்மையை எரித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டதால், போலீஸார் போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT