Published : 21 Feb 2018 01:09 PM
Last Updated : 21 Feb 2018 01:09 PM
மலையாள நடிகை பிரியா பிரகாஷ், படத் தயாரிப்பாளர்கள் மீதான அனைத்து கிரிமினல் நடவடிக்கைகளுக்கும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டது.
மலையாளத்தில் இயக்குநர் உமர் அப்துல் வகாப் இயக்கத்தில், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இந்த திரைப்படத்தில் வரும் பாடலான ‘மணிக்கய மலரய பூவே’ என்ற பாடல் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி பெரும் உச்சத்தை தொட்டத்து. இன்னும் 10 நாட்களில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தின் பாடல், பெரும் வரவேற்பைப் பெற்று, ஏறக்குறைய 3.5 கோடி ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ‘மணிக்கய மலரய பூவே’ பாடல் முஸ்லிம் சமூகத்தின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தையும், அவரின் மனைவி கதீஜா ஆகியோருக்கும் அவதாறு விளைவிக்கும் வகையில் இருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக, ஐதராபாத்தில் உள்ள பளுக்னமா போலீஸ் நிலையம், மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத், மும்பை போலீஸ் நிலையம் ஆகியவற்றில் முஸ்லிம் அமைப்புகளால் புகார் செய்யப்பட்டது. போலீஸார் நடிகை பிரியா பிரகாஷ், இயக்குநர் உமர் அப்துல் வகாப், தயாரிப்பாளர் ஜோசப் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகை பிரியா பிரகாஷ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் வழக்கறிஞர் ஹரிஸ் பீரன் இந்த மனுவை அவசரமாக எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏஎம் கான்வாலிகர், டிஓய் சந்திரசூட் ஆகியோர் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், படத்தயாரிப்பாளர் குழு அனைவர் மீதான கிரிமனல் நடவடிக்கைக்கும் தடைவிதிக்கப்படுகிறது. எதிர்காலத்திலும் அவர்கள் மீது மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யக்கூடாது” என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT