Last Updated : 02 Feb, 2018 09:22 AM

 

Published : 02 Feb 2018 09:22 AM
Last Updated : 02 Feb 2018 09:22 AM

பட்ஜெட் 2018: விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள்- வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் பெருமிதம்

மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு வேளாண் விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்யும் முறை தொடங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். வரும் ராபி பருவ (கோடைகால) வேளாண் விளைபொருளுக்கு உற்பத்தி செலவிலிருந்து 50 சதவீதம் கூடுதல் விலை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் நியாய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் கடன் அட்டை இல்லாமல் இருந்த, பால் விநியோகம் மற்றும் மீன் பிடி தொழில் செய்யும் விவசாயிகளுக்கு அதை வழங்கி இருப்பது மிகப்பெரிய சலுகை ஆகும். விவசாய தொழில் உள்கட்டமைப்புக்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான அறிவிப்பு ஆகும்.

‘ஆப்ரேஷன் கிரீன்’ திட்டத்தின் கீழ், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி விளைவிக்கும் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை விட கூடுதல் விலை கிடைப்பது உறுதி செய்யப்படும். நுகர்வோருக்கும் இவை நியாயமான விலையில் கிடைக்கும். இதன்மூலம் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இதுதொடர்பாக உள்ள பிரச்சினை தீரும்.

வேளாண் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வரிவிலக்கு வழங்கப்படுவதால் அவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். மேலும் அவர்களின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் அடுத்த நிதியாண்டில் ரூ.11 லட்சம் கோடிக்கு வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத அதிக அளவாகும். இதுதவிர வேளாண் துறை சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். சுதந்திரத்துக்குப் பிறகு விவசாயத் துறையின் நலனுக்காக இதுபோல் எந்த அரசும் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்ததில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x