Published : 06 Feb 2024 07:04 AM
Last Updated : 06 Feb 2024 07:04 AM
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த சஞ்சய் சிங், டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சஞ்சிங் சிங்கின் ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இதனிடையே சஞ்சய் சிங்கின் எம்.பி. பதவிக் காலம் கடந்த ஜனவரி 27-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து அவரை மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக ஆம் ஆத்மி கட்சி நியமித்துள்ளது. எம்.பி.யாக பதவியேற்கவும் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்கவும் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த சனிக்கிழமை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். எனினும் பிப்ரவரி 5-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்க அனுமதி வழங்கினார்.
இந்நிலையில் சஞ்சய் சிங் எம்.பி.யாக பதவியேற்க மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று அனுமதி மறுத்துவிட்டார். இந்த விவகாரம் தற்போது உரிமைக்குழுவின் பரிசீலனையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரிக்கவிருந்தது. இந்நிலையில் மார்ச் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT