Published : 30 Jan 2024 11:16 AM
Last Updated : 30 Jan 2024 11:16 AM

சோமாலியா கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்: பாகிஸ்தான் மீனவர்கள் 19 பேரை மீட்டது இந்திய போர்க் கப்பல்

புதுடெல்லி: சோமாலியா கடற்கொள்ளையர்கள் வசம் சிக்கவிருந்த ஈரானிய கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பலை இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பல் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளது. ஈரானிய மீன்பிடி கப்பலில் இருந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 19 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு கொள்ளை முயற்சியை இந்திய கடற்படை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இந்தியக் கடற்படை செய்தித் தொடர்பாளர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திங்கள்கிழமையன்று சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில் இருந்து அல் நயீமி என்ற மீன்பிடிக் கப்பலைக் கடத்த ஆயுதம் ஏந்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள் 11 பேர் முயற்சி செய்தனர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் துரிதமாக செயல்பட்டு ஈரானிய மீன்பிடி கப்பலை மீட்டது. அதிலிருந்த 19 பேரும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாவர்.

இந்தக் கொள்ளை முயற்சியை துரிதமாக செயல்பட்டு தடுத்ததன் மூலம் இவ்வாறாக கைப்பற்றப்படும் படகுகளைக் கடத்தலுக்கு பயன்படுத்தும் கொள்ளையர்களின் முயற்சியும் முறியடிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, கொச்சியில் இருந்து 850 நாட்டிக்கல் மைல் தொலைவில் தெற்கு அரேபியக் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிக்கும் இந்திய போர்க் கப்பல்கள் கடற்கொள்ளையர்களைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பணியாற்றி வருகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

24 மணி நேரத்தில் 2வது முறையாக மீட்பு: முன்னதாக நேற்று, ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய மீன்பிடி படகை சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர். அந்த மீன்பிடி படகில்இருந்த 17 மீனவர்களை பிணைக்கைதியாக்கி சோமாலிய எல்லைப்பகுதிக்கு படகை செலுத்தினர். இதுதொடர்பான தகவல் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பலுக்கு கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இந்திய போர்க்கப்பல், சோமாலிய கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தது. ஈரான் மீன்பிடி படகு FV இமான் மற்றும் அதிலிருந்த17 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் 19 பாகிஸ்தானிய மீனவர்களுடன் கூடிய மற்றொரு கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் வசமிடமிருந்து இந்திய போர்க்கப்பல் மீட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x