Published : 10 Feb 2018 03:50 PM
Last Updated : 10 Feb 2018 03:50 PM
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 30 ஆண்டுகள் சராசரிக்கும் கீழ் சென்றுவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கடுமையாகச் சாடியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார வல்லுநர் கவுசிக் பாசு சமீபத்தில் குறிப்பிடுகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது 30 ஆண்டுகள் சராசரிக்கும் கீழ் சென்றுவிட்டது என்று கூறியுள்ளார். ஆனால், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்கிறார்.
அப்படி என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடந்த 4 ஆண்டுகால சராசரி பொருளாதார வளர்ச்சி என்ன?. பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் புதிய முறையின் கீழ் நாட்டின் வளர்ச்சி 7.3 சதவீதம் என நீங்கள் கூறலாம். ஆனால், கடந்த கால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டுகால சராசரியைக் காட்டிலும் குறைவுதான்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வளர்ச்சி வீதத்தின் இலக்கு என்ன?. முதலீடு ஈர்ப்பு எவ்வளவு?, தொழில்களுக்கு என்ன கடன் கொடுத்தீர்கள்? அனைத்தும் கீழ்நோக்கி செல்கிறது.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
2018-19ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது பேசிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, “ தேசிய ஜனநாயக் கூட்டணி அரசின் கீழ் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 7.5 சதவீத வளர்ச்சியை அடைந்து இருக்கிறோம். 2.50 லட்சம் கோடி டாலர் கொண்ட பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது. ஜிஎஸ்டி வரி, திவால்சட்டம், ஆதார் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT