Published : 08 Feb 2018 07:44 AM
Last Updated : 08 Feb 2018 07:44 AM

ராஜஸ்தான் வங்கியில் ரூ.925 கோடி கொள்ளை முயற்சி முறியடிப்பு

ராஜஸ்தானில் ஒரு கும்பல் வங்கி கிளைக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றது. ஆனால் 27 வயது போலீஸ்காரர் சாதூரியமாக செயல்பட்டு அந்த முயற்சியை முறியடித்துள்ளார். இதன்மூலம் ரூ.925 கோடி தப்பியது.

ஜெய்ப்பூரின் சி-ஸ்கீம் பகுதியில் தனியார் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணிக்கு முகமூடி அணிந்த 13 பேர் கொண்ட கும்பல் வங்கிக் கிளைக்கு சென்றுள்ளது. இதில் 3 பேர் அங்கிருந்த பாதுகாவலரை கட்டிப்போட்டுவிட்டு, வங்கிக் கிளையின் பூட்டை உடைக்க முயன்றுள்ளனர்.

இது மிகவும் பிரதான கிளை என்பதால், இரவு நேரத்திலும் வங்கியின் உள்புறம் காவலர் ஒருவர் பணியில் இருப்பது வழக்கம். அந்த வகையில் பணியிலிருந்த காவலர் சீதாராம், உள்ளிருந்தபடி கொள்ளையர்களின் முயற்சியைப் பார்த்தார். சிறிதும் தாமதிக்காமல் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதை எதிர்பார்க்காத கும்பல் காரில் தப்பியது. பின்னர் காவலர் வெளியில் வந்து பாதுகாவலரை விடுவித்தார்.

இதுகுறித்து காவல் துணை ஆணையர் பிரபுல் குமார் கூறும்போது, “மிகவும் பிரதானமான இந்தக் கிளையிலிருந்து பிற கிளைகளுக்கு பணம் அனுப்பப்படுவது வழக்கம். இங்கு எப்போதும் அதிக அளவில் பணம் இருப்பில் இருக்கும். இதை தெரிந்து கொண்ட அந்த கும்பல் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது. காவலர் சீதாராம் சாதுரியமாக செயல்பட்டதால் ரூ.925 கோடி ரொக்கம் தப்பியது” என்றார்.

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி, வங்கியியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x