Published : 21 Jan 2024 06:10 AM
Last Updated : 21 Jan 2024 06:10 AM

ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி அயோத்தியில் 3 அடுக்கு பாதுகாப்பு

அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி அயோத்தியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேசம், அயோத்தியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மடாதிபதிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகம், விளையாட்டு துறை பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் என 11,000 விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர்.

தீவிரவாதிகள் சதித் திட்டம்: ராமர் கோயில் திறப்பு விழாவின்போது தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளன. ராமர் கோயில் திறப்பு விழாவின்போது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக அயோத்தி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படையிடம் (எஸ்பிஜி) அயோத்தி நகர பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி), தீவிரவாத தடுப்புப் படை, சிறப்பு கமாண்டோ படை, சிஆர்பிஎப், மத்திய தொழில் பாதுகாப்பு படை, மாநில போலீஸார் என சுமார் 30,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் 11,000-க்கும் மேற்பட்ட கேமராக்கள் அயோத்தி முழுவதும் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் மூலம் பழைய குற்றவாளிகளின் முகங்களை அடையாளம் காண முடியும். ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள், கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

அயோத்தி மட்டுமன்றி உத்தர பிரதேசம் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக உத்தர பிரதேசத்தை ஒட்டியுள்ள நேபாளத்தின் 570 கி.மீ. தொலைவு எல்லைப் பகுதியில் தீவிர ரோந்து பணி நடைபெறுகிறது.

அயோத்தி நகர பாதுகாப்பு குறித்து உத்தர பிரதேச போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த 18-ம் தேதி முதல் அயோத்தி நகரின் பாதுகாப்பு எஸ்பிஜி படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமை முதல் அயோத்தி நகரம் முழுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நகரின் பிரதான சாலைகள், தெருக்களில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து அயோத்திக்கு செல்லும் சாலைகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. அந்நிய நபர்கள் அயோத்தியில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அயோத்தி நகரம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இதன்படி ராமர் கோயில் வளாகம் சிவப்பு வளைய பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கு எஸ்பிஜி, என்எஸ்ஜி படைகளின் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ராமர் கோயிலுக்கு செல்வதற்கான பிரதான பாதைகள் மஞ்சள் வளைய பாதுகாப்பு பகுதியாகவும், அயோத்தியின் இதர பகுதிகள் பச்சை வளைய பாதுகாப்பு பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ராமர் கோயில் வளாகத்தின் வான் பகுதியில் ட்ரோன்கள், ஹெலிகாப்டர், விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ட்ரோன்கள் பறப்பதை தடுக்க ராமர் கோயில் வளாகத்தில் சிறப்பு ஜாமர் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. பல கி.மீ. தொலைவில் ட்ரோன்கள் பறந்தால்கூட, சிறப்பு ஜாமர் கருவி அடையாளம் கண்டு, ட்ரோன்களை செயலிழக்கச் செய்யும்.

மத்திய அரசின் ரா உளவுப் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் அயோத்தியில் முகாமிட்டு உள்ளனர். மாநில உளவுத் துறையை சேர்ந்த போலீஸார் சாதாரண உடையில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அயோத்தி சர்வதேச விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பமிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு உத்தர பிரதேச போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரிவினைவாதிகள் கைது: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின்போது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக உத்தர பிரதேச தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சூழலில் அயோத்தியில் சுற்றித் திரிந்த அஜித் குமார் சர்மா, சங்கல்லால், பிரதீப் பூனியா ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து உத்தர பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி தேவேந்திர விஷ்னோய் கூறியதாவது:

ராஜஸ்தானை சேர்ந்த 3 பேரை அயோத்தியில் கைது செய்துள்ளோம். இவர்கள் காலிஸ்தான் பிரிவினை குழுவை சேர்ந்தவர்கள் ஆவர்.

அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவின் உத்தரவின்பேரில் 3 பேரும் அயோத்திக்கு வந்து வேவு பார்த்துள்ளனர். அயோத்தி வரைபடத்தை காலிஸ்தான் பிரிவினைவாத குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பன்னுவிடம் இருந்து அடுத்த உத்தரவுக்காக 3 பேரும் காத்திருந்துள்ளனர். அதற்குள் 3 பேரையும் கைது செய்துவிட்டோம். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு எஸ்பி தேவேந்திர விஷ்னோய் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x