Published : 14 Jan 2024 05:23 AM
Last Updated : 14 Jan 2024 05:23 AM

போலீஸ் தடையை மீறி ஆந்திராவில் களை கட்டும் சேவல் பந்தயங்கள்: ரூ.5 ஆயிரம் கோடி வரை கைமாறும் என எதிர்பார்ப்பு

காக்கிநாடா: தமிழகத்தில் ஜல்லி கட்டு நடப்பது போன்று, ஆந்திராவின் கிருஷ்ணா, விசாகப்பட்டினம், கோதாவரி ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி சேவல் பந்தயங்கள் களை கட்டும்.

இதில் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், நிலக்கிழார்கள் உள்ளிட்டோர் லட்சக் கணக்கில் பணம், விலைஉயர்ந்த கார்கள், நிலப்பட்டாக்களை பந்தயங்களாக வைத்து ஆடுவது வழக்கம். இதனை காண பல கிராம மக்கள் திரண்டு வந்து இரவு, பகலாக அங்கேயே தங்கி பொங்கல் பண்டிகையை சிறப்பாக்குவார்கள்.

பந்தயம் நடத்தும் நிர்வாகிகள், பந்தயத்தில் ஈடுபடுவோர் மட்டுமின்றி, பந்தயத்தை பார்க்க வருவோருக்கும் கறி விருந்து 3 வேளையும் தடபுடலாக நடக்கும். பந்தயத்தில் தோற்ற சேவல் விருந்தாக மாறி விடும்.

சேவல் பந்தயம் நடத்த ஆந்திர போலீஸார் தடை விதித்துள்ளனர். பந்தயம் நடத்தப்படும் 13 இடங்களை கண்டறிந்து அவற்றை டிராக்டரால் உழுது விட்டனர். ஆனாலும் தடையை மீறி வேறு இடங்களில் நிலத்தை சமன் செய்து, ஷெட்கள் அமைத்து, தற்காலிகமாக குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து, சேவல் பந்தயங்கள் நடந்து வருகின்றன.

இதற்காக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பந்தய சேவல்கள் விற்கப்பட்டு வருகின்றன. குடிவாடா, பீமவரம், காக்கிநாடா உள்ளிட்ட இடங்களில் சேவல் பந்தயத்திற்கு குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் பந்தய பணம் வைக்கப்படுகிறது. இந்த பந்தயங்கள் மூலம் மொத்தம் ரூ.5 ஆயிரம் கோடி கைமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x