Published : 25 Jan 2018 04:30 PM
Last Updated : 25 Jan 2018 04:30 PM
ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட காரணமாக இருந்த கொள்ளையன் நாதுராம் இன்று தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ராஜஸ்தான் காவல்துறை தன் விசாரணை முடித்து விட்டதால் கொளத்தூர் கொள்ளை வழக்கில் அவர் இன்று இரவு சென்னை திரும்புகிறது தமிழக காவல் படை.
சென்னையின் கொளத்தூர் நகைக்கடை கொள்ளைக்குப் பின் ராஜஸ்தான் தப்பிவிட்ட கொள்ளையன் நாதுராமை பிடிக்க சென்னை போலீஸ் படை சென்றிருந்தது. பாலி மாவட்டத்தில் உள்ள ஜெய்தாரனின் ராமாவாஸ் கிராமத்தில் தன் நண்பர் தேஜாராமின் பண்ணை வீட்டில் நாதுராம் ஒளிந்திருந்தார். இந்த வீட்டை டிசம்பர் 12-ல் சென்னை படையினர் முற்றுகையிட்டனர்.
இதில், நாதுராம் தம் மனைவி மஞ்சு மற்றும் சககொள்ளையன் தீபாராம் ஜாட் ஆகியோருடன் அங்கிருந்து தப்பி விட்டார். வீட்டில் இருந்தோர் நடத்திய தாக்குதலில் தப்ப இன்ஸ்பெக்டர் டி.எம்.முனிசேகர் உட்பட நான்கு காவலர்கள் சுவர் ஏறி குதித்தனர். தாக்குதலில் சிக்கிய பெரியபாண்டியன் வெளியே வரும்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானார். இது முனிசேகர் கைத்துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு என்பதால், அவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது இதனால், நாதுராமை பிடிப்பதில் ராஜஸ்தான் போலீஸார் தீவிரம் காட்டினர். இதன் பலனாக நாதுராம் கடந்த 13-ம் தேதி குஜராத்தில் கைது செய்யப்பட்டார்.
இவரை தனது விசாரணையில் எடுத்த ஜெய்தாரன் காவல் நிலையத்தினர் தொடர்ந்து ஐந்து நாள் வைத்திருந்தனர். இதன் விசாரணையில் அவரிடம் கொள்ளை சம்பந்தப்பட்ட சில தகவல்கள் மட்டுமே கிடைத்தன. பெரியபாண்டியன் சுட்டுக்கொன்றதில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என நாதுராம் மறுத்துவிட்டார். எனவே, ஐந்து நாள் விசாரணைக்கு பின் ஜெய்தாரன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நாதுராம். இந்தத் தகவல் சென்னை போலீஸாருக்கும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், சென்னையில் இருந்து அதன் காவல்துறை ஆணையர் ஜெயராமன் தலைமையில் ஒரு காவலர் படை ஜெய்தாரனுக்கு நேற்று முன் தினம் வந்தது. இவர்களுடன் இன்று சென்னையின் மற்றொரு துணை ஆணையரான சந்தோஷ்குமாரும் வந்து கலந்து கொண்டார். அவரிடம் கொளத்தூர் கொள்ளை வழக்கில் சிக்கிய நாதுராம் மீதான கைது வாரண்டும் இருந்தது. இதை இன்று மதியம் ஜெய்தாரன் நீதிமன்றத்தில் சென்னை படையினரால் சமர்ப்பிக்கப்பட்டது. இதை அடுத்து ஜெய்தாரன் சிறையில் இருந்த நாதுராம் அதன் காவல்துறையினரால் சென்னை படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூர் வரை வாகனத்தில் கொண்டு செல்லப்படும் நாதுராம் அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார். இதில் ஜெய்ப்பூர் வரையில் நாதுராமை கொண்டு செல்ல ராஜஸ்தான் போலீஸ் பாதுகாப்பு அளிக்கிறது. இவர்கள் நள்ளிரவு சென்னை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரிடம் சென்னை போலீஸார் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது எனத் தெரியவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT