Published : 05 Jan 2018 10:33 AM
Last Updated : 05 Jan 2018 10:33 AM
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கான தண்டனை விவரத்தை அறிவிப்பது நேற்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
கால்நடைத் தீவன ஊழலில் லாலு மீது மட்டும் 5 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சாஸ்பாஸா கருவூல மோசடியில் 2013-ம் ஆண்டில் அவருக்கு ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
அவர் மீதான 2-வது கால்நடைத் தீவன வழக்கு ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ் வழக்கில் தியோகர் கருவூலத்தில் ரூ.89 லட்சம் மோசடி செய்ததற்காக அவர் குற்றவாளி என்று கடந்த 23-ம் தேதி நீதிபதி சிவபால் சிங் தீர்ப்பளித்தார்.
அவருக்கான தண்டனை விவரம் நேற்று முன்தினம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அன்றைய தினம் ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தின் வழக்கறிஞர் பிருந்தேஸ்வரி பிரசாத் காலமானதால் தண்டனை விவர அறிவிப்பு ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று தண்டனை விவரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது நீதிபதி சிவபால் சிங் கூறியபோது, லாலுவிற்கான தண்டனை விவரம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
நீதிபதி மேலும் கூறியபோது, “லாலுவின் ஆதரவாளர்கள் பலர் தொலைபேசியில் பேசினர். நான் சட்டத்தை மட்டுமே பின்பற்றுவேன்” என்று தெரிவித்தார். இதுகுறித்து ராஞ்சி வழக்கறிஞர் வட்டாரங்கள் கூறியபோது, தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதை நீதிபதி மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் என்று தெரிவித்தன.
“இரண்டாவது கால்நடைத் தீவன வழக்கில் லாலுவுக்கு ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும் குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்று லாலுவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
லாலு இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட மாட்டார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதி சிவபால் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT