Last Updated : 08 Dec, 2023 02:56 PM

 

Published : 08 Dec 2023 02:56 PM
Last Updated : 08 Dec 2023 02:56 PM

மிக்ஜாம் புயலால் ரயில் ரத்தாகி உ.பி.யில் சிக்கிய தமிழர்கள் 50 பேரும் இரு மாநில அரசுகளின் உதவியால் வீடு திரும்பினர்

மிக்ஜாம் புயலால் ரயில் ரத்தானதால் உ.பியில் சிக்கிய விழுப்புரத்தைச் சேர்ந்த 50 பேரும் இருமாநில அரசுகளின் உதவியால் வீடு திரும்பினர்.

புதுடெல்லி: மிக்ஜாம் புயல் காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டதால், விழுப்புரத்தைச் சேர்ந்த 50 பேர் வாரணாசியில் சிக்கினர். இவர்கள் அனைவரும் தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேச அரசு அதிகாரிகளின் உதவியால் வீடு திரும்பினர்.

கடந்த நவம்பர் 24-ல் விழுப்புரத்திலிருந்து சுமார் 50 பேர் வட மாநிலப் புனிதப் பயணம் கிளம்பினர். நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்தவர்களில் 26 பெண்களும், வயதானவர்களும் அடங்குவர். இவர்கள் நவம்பர் 26-ல் வாரணாசிக்கு வந்த பின் அலகாபாத்துக்கும் சென்றனர். பிறகு பிஹாரின் புத்தகயாவுக்கு பேருந்து மூலம் சென்றனர்.புத்தகயாவிலிருந்து அனைவரும் சென்னைக்கு டிசம்பர் 1-ல் ரயிலில் முன்பதிவும் செய்திருந்தனர். சென்னையின் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், இவர்கள் அனைவரும் புத்தகயாவில் சிக்கினர்.

இந்நிலையில், அவர்கள் செலவுக்காக வைத்திருந்த பணம் அனைத்தும் காலியாகிவிட்டது. மழையின் காரணமாக, தமிழகத்திலுள்ள தங்கள் குடும்பத்தாரின் உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, தாம் வந்த பேருந்திலேயே வாரணாசிக்கு வந்து சேர்ந்தனர். இங்கு தங்களது கைப்பேசி மூலமாக தமிழக அரசின் வெளிநாடுவாழ் தமிழர்நலன் துறையினரை தொடர்பு கொண்டனர்.

இத்துறையின் மூலமாக உ.பி.யின் வாரணாசியிலுள்ள மாவட்ட ஆட்சியருக்கு விழுப்புரம்வாசிகள் சிக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மாவட்ட ஆட்சியரான எஸ்.ராஜலிங்கம், திருநெல்வேலியின் கடையநல்லூரை சேர்ந்த தமிழர். ஆட்சியர் ராஜலிங்கம் உடனடியாக அதிகாரிகளை அனுப்பி வேண்டிய உதவிகளை செய்துள்ளார். பின்னர், இரண்டு நாட்களுக்குபின், டிசம்பர் 4-ல் கிளம்பிய கங்கா காவேரி எக்ஸ்பிரஸின் ஏசி-3ம் வகுப்பில் சிறப்பு முன்பதிவு செய்து இவர்கள் அனைவரையும் அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’இணையத்திடம் விழுப்புரம்வாசிகளின் ரயில் பயணத்தை ஏற்பாடு செய்த ஸ்ரீனிவாசன் கூறும்போது, ‘சென்னையில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையால் வட மாநிலத்திலிருந்த எங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.உதவி கேட்டு தமிழக அரசுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் தகவலுக்கு நல்ல பலன் கிடைத்தது. அந்த துறையின் அமைச்சரான செஞ்சி மஸ்தானும் எங்களை போன் மூலம் தொடர்புகொண்டு பேசினார். வாரணாசி ஆட்சியர் எங்களை ஸ்ரீராமதரக்கா ஆந்திரா ஆஸ்ரமத்தில் சகல வசதிகளுடன் தங்க வைத்தார். அந்த இரண்டு நாட்களும் எங்கள் அனைவருக்கும் உணவு உள்ளிட்டவை உ.பி அரசு சார்பில் அளிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 6-ல் நாங்கள் பத்திரமாக எங்கள் வீடு வந்து சேர்ந்தோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x