Published : 05 Dec 2023 12:32 AM
Last Updated : 05 Dec 2023 12:32 AM

மிக்ஜாம் புயல் | புறநகர் ரயில் சேவை ரத்து; எழும்பூர், சென்ட்ரலில் இருந்து செல்லும் 25 ரயில்கள் ரத்து

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பதிவாகி உள்ள நிலையில் இன்று (டிச.5, செவ்வாய்க்கிழமை) சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் 25 தொலைதூர ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

புறநகர் ரயில் சேவையை பொறுத்தவரையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வந்தே பாரத், சதாப்தி மற்றும் பல்வேறு விரைவு ரயில்கள் இந்த பட்டியலில் அடங்கும். அதே நேரத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இன்று (டிச.5) வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் சென்னை விமான நிலையத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள காரணத்தால் இன்று காலை 9 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு விமானங்களின் பயண சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல சென்னையின் பல்வேறு சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ள காரணத்தால் சாலை போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதனால் மக்கள் ஆங்காங்கே ஸ்தம்பித்து உள்ளனர். பல்வேறு இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி தேவை இருந்தால் மட்டுமே மக்கள் வெளிவர வேண்டுமெனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. தற்போது மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் சென்றுள்ளது. இன்று முற்பகல் ஆந்திராவில் இந்த புயல் கரையை கடக்க உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x