Published : 05 Dec 2023 03:55 PM
Last Updated : 05 Dec 2023 03:55 PM

இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் | மம்தா, நிதிஷ், அகிலேஷ் பங்கேற்க மறுப்பு

இண்டியா கூட்டணி

புதுடெல்லி: இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறவிருக்கும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்கும் முடிவுடன் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்தன. இந்தக் கூட்டணிக்காக கட்சிகளை இணைக்கும் வேலைகளில் ஐக்கிய ஜனதாதளம் தலைவர் முக்கிய பங்காற்றினார். கடந்த ஜூன் மாதம் இக்கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் ஜூலையில் பெங்களூருவில் நடைபெற்றது. அப்போதுதான் கூட்டணிக்கு 'இண்டியா' என்ற பெயரும் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த நிலையில் இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் நாளை (டிசம்பர் 6-ஆம் தேதி) டெல்லியில் நடைபெறவிருப்பதாகவும், கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தார் கார்கே.

இதனிடையே டிச.3-ம் தேதி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியானது. இதில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மற்ற 3 மாநிலங்களிலும் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், மம்தா பானர்ஜி அகிலேஷ் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்தியா கூட்டணியில் நீடிக்கும் குழப்பம் நீடிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மம்தா பானர்ஜி நேற்று இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, ”நாளை இண்டியா கூட்டணி சார்பில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன். இந்தக் கூட்டம் திடீரென திட்டமிடப்பட்டிருக்கிறது. இதுபற்றி எனக்கு முன்கூட்டியே தெரியாததால், நான் ஏற்கனவே வடக்கு வங்காளத்தில் ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டிருக்கிறேன். இது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லாததால், நான் வடக்கு வங்காள சுற்றுப்பயணத்துக்குச் செல்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜியின் கூற்றுக்கு பதிலளித்த சிவசேனா (யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “இந்த கூட்டம் அவசரமாக அழைக்கப்படவில்லை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், "இந்தியக் கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை என்பதை மம்தா பானர்ஜி புரிந்துகொண்டார், அதனால்தான் அவர் கூட்டத்தைத் தவிர்க்கிறார்" என்று மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கூறினார்.

இதையடுத்து தற்போது சமாஜ்வாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி இன்று கூறுகையில், ”நாளை நடைபெற உள்ள இண்டியா கூட்டணி சார்பில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ளும் திட்டம் இல்லை. பேராசிரியர் ராம் கோபால் யாதவ் அல்லது வேறு தலைவர்கள் யாராவது கூட்டத்துக்குச் செல்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இண்டியா கூட்டணியின் முக்கியத் தலைவரான பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x