Published : 30 Nov 2023 09:06 AM
Last Updated : 30 Nov 2023 09:06 AM

தெலங்கானா தேர்தல் | மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, எம்எல்சி கவிதா வாக்களிப்பு - பாதுகாப்புப் பணிகளில் 75 ஆயிரம் போலீஸார்

குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்த மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி.

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமானது. மாவோயிஸ்ட்களின் நடமாட்டமும் சில தொகுதிகளில் உள்ளதால் தெலங்கானா தேர்தல் பாதுகாப்பு பணிகளில் 75 ஆயிரம் போலீஸாரும், 375 கம்பனி துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிந்து புதிய மாநிலமாக உருவான தெலங்கானா மாநிலத்தின் 3-வது சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைற்று வருகிறது. இதுவரை 2 முறை முதல்வராக பதவி வகித்துள்ள சந்திரச்சேகர ராவ், தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைப்பாரா ? அல்லது தெலங்கானா மாநிலத்தை வழங்கிய காங்கிரஸ் முதன் முறையாக வெற்றி பெறுமா ? அல்லது, கர்நாடக மாநிலத்தில் கை நழுவிய வெற்றியை, பாஜக தெலங்கானாவில் பதிக்குமா ? எனும் கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பாஜக, மற்றும் ஆளும் கட்சியான பிஆர் எஸ் கட்சிகள் மும்முரமாக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டன. வாக்குறுதிகளை 3 கட்சிகளும் அள்ளி வீசியுள்ளன. இந்நிலையில், கடந்த 28-ம் தேதி மாலை 4 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், இன்று காலை முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

35,655 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு: தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக மொத்தம் 35,655 வாக்கு சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் தொடங்கின. அதற்கு முன்னதாக அனைத்து வாக்கு சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் நிஜாமாபாத், நாகார்ஜுன சாகர், கம்மம் உட்பட சில இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவும் இந்த இடங்களில் தாமதமாக தொடங்கியது.

ஆனால், வாக்கு எண்ணிக்கை நடைபெற தொடங்கிய காலை 7 மணிக்கு முன்னரே பலர் நீண்ட வரிசைகளில் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய காத்திருந்தனர். இதனால் இம்முறை வாக்கு சதவீதம் உயரும் என எண்ணப்படுகிறது. மாவோயிஸ்ட்கள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதிகளில் மட்டும் இன்று மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4 ஆயிரம் பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு கூடுதல் ராணுவப்படை மற்றும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளில் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை 75 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

பிரமுகர்கள் வரிசையில் நின்று வாக்களிப்பு: தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் இன்று காலை முதலே பிரமுகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள நிலையில், நடிகர் சிரஞ்சீவி ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தனது குடும்பத்தாருடன் வரிசையில் நின்று வாக்களித்தார். இதேபோன்று இங்கு ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, எம்.எல்.சி கவிதா உள்ளிட்டோர் வாக்களித்தனர். இது விடுமுறை அல்ல. ஜனநாயக கடமை என்பதால் அனைவரும் வாக்களிக்க முன் வரவேண்டுமென பிரமுகர்கள் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

பிஆர்எஸ் எம்எல்சி கவிதா

மனைவியுடன் நடிகர் சிரஞ்சீவி

ஜூனியர் என்டிஆர்

இந்த தேர்தலில் தெலங்கானாவில் மொத்தம் 3 கோடியே, 26 லட்சத்து, 18 ஆயிரத்து, 205 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்களர்களே சற்று அதிகமாக உள்ளனர். அதாவது, ஆண் வாக்காளர்கள் 1,62,98,418 பேரும், பெண் வாக்காளர்கள் 1,63,01,705 பேரும் உள்ளனர். 3-வது பாலினத்தின வாக்காளர்கள் 2,676 பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் 18 முதல் 19 வயது வரை உள்ள புதிய வாக்காளர்கள் 9,99,667 பேர் இம்முறை முதன் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

தேர்தல் பணிக்கு மொத்தம் 3.75 லட்சம் அரசு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்று அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வழங்கப்பட்டு, அந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை ‘ஹோம் ஓட்டிங்’ எனும் புதிய முறையும் அமல் படுத்தப்பட உள்ளது. அதாவது 80 வயது நிரம்பிய மூத்த வாக்காளர்களின் வீடுகளுக்கே தேர்தல் அதிகாரிகள் சென்று வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x