Published : 23 Nov 2023 06:04 AM
Last Updated : 23 Nov 2023 06:04 AM

அமெரிக்காவில் இந்திய தூதரகம் மீதான தாக்குதல் - பஞ்சாப், ஹரியாணா மாநிலத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீதான தாக்குதல் தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் 14 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது கடந்த மார்ச் 19-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். காலிஸ்தான் ஆதரவு முழக்கத்துடன் தூதரக வளாகத்தில் 2 காலிஸ்தான் கொடிகளை பறக்கவிட்டனர். இந்தக் கொடிகள் உடனடியாக அகற்றப்பட்டன.

இதையடுத்து கடந்த ஜூலை 2-ம் தேதி, சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அதே தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்து எரிக்க முயன்றனர். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்த விசாரணை தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் சான்பிரான்சிஸ்கோ சென்று வந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான தகவல்களை திரட்டவும் குற்றவாளிகளை அடையாளம் காணவும் என்ஐஏ அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் 14 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

இதுகுறித்து என்ஐஏ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

பஞ்சாபில் மோகா, ஜலந்தர், லூதியானா, குர்தாஸ்பூர், மொஹாலி, பாட்டியாலா ஆகிய மாவட்டங்களிலும் ஹரியாணாவில் குருஷேத்ரா, யமுனாநகர் ஆகிய மாவட்டங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. மார்ச் 19, ஜூலை 2 ஆகிய தேதிகளில் நடந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ள முழு சதித்திட்டத்தை கண்டறிய இந்த சோதனை நடத்தப்பட்டது,

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தொடர்பான தகவல்கள் கொண்ட டிஜிட்டல் தரவுகள் மற்றும் பிற ஆவணங்கள் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x