Published : 11 Nov 2023 01:09 PM
Last Updated : 11 Nov 2023 01:09 PM

வேலைக்கு நிலம் வழக்கு | லாலு குடும்பத்துக்கு நெருக்கமானவர் கைது - அமலாக்கத் துறை நடவடிக்கை

லாலு பிரசாத் யாதவ் | கோப்புப்படம்

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கியது தொடர்பான வழக்கு விசாரணையில் பணமோசடி தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் குடும்பத்துக்கு நெருக்கமானவராக அறியப்படும் அமித் கத்யால் என்பவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "விசாரணைக்காக அமித் கத்யால் நேற்று (வெள்ளிக்கிழமை) அழைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார் என்றனர். உள்ளூர் நீதிமன்றத்தில் கத்யால் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விசாரணைக்காக காவலில் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கடந்த இரண்டு மாதங்களாக அமலாக்கத் துறையால் விசாரணைக்கு ஆஜராகும் படி கத்யாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணையை ரத்து செய்யக்கோரி கத்யால் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது.

கடந்த மார்ச் மாதத்தில் லாலு பிரசாத் யாதவ், அவரது மகனும் பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், அவரது சகோதரிகள் உள்ளிட்டோர் இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியபோது, அமித் கத்யாலின் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அமலாக்கத் துறை தகவலின் படி, ஏ.கே இன்போசிஸ்டம் பி. லிமிட் -ன் முன்னாள் இயக்குநரான அமித் கத்யால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு மிகவும் நெருங்கிய கூட்டாளியாவார். வேலைக்கு நிலம் வாங்கிய வழக்கில் ஏ.கே. இன்போசிஸ்டம் நிறுவனம் பயனாளி நிறுவனம் என்று கூறப்படுகிறது. அதன் பதிவுசெய்யப்பட்ட முகவரியான டெல்லி நியூ ப்ரெண்ஸ் காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடமாகும். இதை தேஜஸ்வி யாதவ் பயன்படுத்தி வந்தார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பதவிகளுக்கு பல்வேறு நபர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு வேலை வழங்க லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x