Published : 31 Oct 2023 02:10 PM
Last Updated : 31 Oct 2023 02:10 PM

“எதிர்க்கட்சியினரின் செல்போன்களில் அரசு ஊடுருவலா?” - மஹுவா உள்ளிட்ட எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

மஹுவா மொய்த்ரா

டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தனது தொலைபேசி மற்றும் மின்னஞ்சலை மத்திய அரசு ஹேக் செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இதே குற்றச்சாட்டை மேலும் சில எம்.பி.க்கள் முன்வைத்துள்ளனர்.

தொழிலதிபர் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடமிருந்து பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்றதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, அக்டோபர் 31-ம் தேதி மொய்த்ராவை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. அதற்கு அவர் அவகாசம் கேட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, மக்களவை நெறிமுறைக் குழு அளித்துள்ள பதிலில், “அக்டோபர் 31-ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும், இதற்கு மேல் கால நீட்டிப்பு வழங்க முடியாது” என்று மஹுவா மொய்த்ராவிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தங்களின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் போன்றவற்றை மத்திய அரசு உளவு பார்ப்பதாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் எக்ஸ் வலைதளத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மொபைலில் இருக்கும் தகவல்களை ‘ஸ்டேட் ஸ்பான்சர்டு அட்டாக்கர்ஸ்’ (State Sponsored attackers) திருட முயற்சிப்பதாக எம்.பி மஹுவா மொய்த்ரா, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் மூத்த தலைவர் பவான் கேரா ஆகியோருக்கு ஆப்பிள் நிறுவனம் வார்னிங் மெசேஜ் அனுப்பியிருக்கிறது. இதை தங்களின் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்திருக்கின்றனர்.

இதையொட்டி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தனது தொலைபேசி மற்றும் மின்னஞ்சலை மத்திய அரசு ஹேக் செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். அதோடு அதன் ஸ்கிரீன் ஷாட்டுகளையும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் பவான் கேரா "அன்புள்ள மோடி சர்க்கார், ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், பாஜக ஐடி பிரிவின் தலைவர் அமித் மாளவியா, எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகளை மத்திய அரசு ஹேக் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கிடைக்கும் வரை காத்திருக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, இந்த அச்சுறுத்தல் தொடர்பான சில அறிவிப்புகள் தவறானதாக இருக்கலாம் (some may be false alarms) அல்லது சில தாக்குதல்கள் கண்டறியப்படாமலும் இருக்கலாம் என ஆப்பிள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x