Published : 23 Oct 2023 02:12 PM
Last Updated : 23 Oct 2023 02:12 PM

‘விவிபாட் ரசீதை வாக்காளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ - தேர்தல் ஆணையத்துக்கு  திக்விஜய் சிங் வேண்டுகோள்

திக்விஜய் சிங் | கோப்புப்படம்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, விவிபாட் (VVPAT) ரசீதை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனையின்போது முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட ஓர் அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள அவர் விவிபாட் ரசீது வாக்களர்களிடம் வழங்கப்பட்டு அவை வேறொரு வாக்குப் பெட்டியில் சேகரிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் திங்கள்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில், "மதிப்புக்குரிய தேர்தல் ஆணையத்துக்கு, எங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை உள்ளது. தேர்தலின் போது விவிபாட் ரசீதை எங்களிடம் (வாக்காளர்கள்) தனியாக கொடுத்து விடுங்கள். நாங்கள் அதை தனியாக ஒரு வாக்குப்பெட்டியில் போடுகிறோம்.

வாக்குகள் எண்ணுவதற்கு முன்பாக , அச்சீட்டுகள் சேகரித்து வைத்திருக்கும் ஏதாவது 10 வாக்குப்பெட்டிகளில் உள்ள சீட்டுக்களை எண்ணி, அதனை வாக்குபதிவு எண்ணிக்கையுடன் சரிபார்க்கவும். இரண்டின் முடிவுகளும் ஒன்றாக இருந்தால் பின்னர் வாக்கு முடிவுகளை வெளியிடவும். இதனைச் செய்வதில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பிரச்சினை?. உச்ச நீதிமன்றத்துக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இத்துடன் மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சோதனையின்போது விவிபாட் -ல் ஒரே கட்சியின் சின்னம் பதிவானது குறித்த செய்தி ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.

திக் விஜய் சிங்கின் இந்தப் பதிவுக்கு மத்தியப் பிரதேச மாநில பாஜக செயலாளர் ரஜ்னீஸ் அகர்வால் அளித்துள்ள பதிலில், காங்கிரஸ் கட்சி படுமோசமாக தோற்கும் போது எல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பழி போடுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டினை உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் மறுத்து விட்ட நிலையில், திக்விஜய் சிங் மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது இவ்வாறு பழிபோடுகிறார். காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை. அக்கட்சி இப்போதே இது போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க தொடங்கி விட்டது" என்றார்.

சமீபத்திய ஆண்டுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக தொடந்து பல்வேறு அரசியல் கட்சிகள் சந்தேகம் எழுப்பி வருகின்றன. 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இந்திரங்களின் முதல்நிலைச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை இந்த மாதத்தின் தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x