Published : 09 Jan 2018 09:14 AM
Last Updated : 09 Jan 2018 09:14 AM

அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை வாபஸ் பெற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

திரையரங்கில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை தற்போதைக்கு வாபஸ் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2016 நவம்பர் 3-ம் தேதி நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயம் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கேரள திரைப்பட சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சந்திரசூட் ஆகியோ விசாரித்தனர். அப்போது பழைய உத்தரவில் திருத்தம் செய்யலாம் என்று நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பான விதிகளை வரையறுக்க அனைத்து அமைச்சரவைகளை சேர்ந்த உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 6 மாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதுவரை திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x