Published : 19 Jan 2018 10:00 AM
Last Updated : 19 Jan 2018 10:00 AM

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் வாய்ந்த அக்னி 5 எவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களை சுமந்தபடி கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

நாட்டின் பாதுகாப்புக்காக அக்னி என்ற பெயரில் இதுவரை 4 வகை ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.இந்த ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அடிக்கடி விண்ணில் செலுத்தி பரிசோதித்து பார்ப்பது வழக்கம்.

அந்த வகையில், ஒடிஷா மாநில கடற்கரை அருகே அப்துல் கலாம் தீவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் 4-வது (நகரும்) ஏவுதளத்திலிருந்து நேற்று காலை 9.54 மணிக்கு அக்னி 5 ஏவுகணை ஏவப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த அதிநவீன ஏவுகணை, 19 நிமிடங்களில் 4,900 கி.மீ. தூரம் கடந்து சென்று இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

அக்னி 5 ஏவுகணை 17 மீட்டர் நீளமும் 50 டன் எடையும் கொண்டது. அணு ஆயுதங்களை சுமந்தபடி 5,000 கி.மீ.க்கு அப்பால் உள்ள எதிரி நாட்டு இலக்கை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தது. சீனாவின் வடபகுதி வரை பாய்ந்து சென்று தாக்கும். குறைவான பராமரிப்பு, அதிக நம்பகத்தன்மை உள்ளிட்ட கூடுதல் அம்சங்கள் இதில் உள்ளன.

இதற்கு முன்பு, 2012 ஏப்ரல், 2013 செப்டம்பர், 2015 ஜனவரி, 2016 டிசம்பர் என 4 முறை அக்னி-5 ஏவுகணை பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதுவே இறுதி பரிசோதனை என அப்போது கூறப்பட்டது. எனவே, இப்போது 5-வது முறையாக முழு அளவில் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் சில முறை சோதித்துப் பார்க்கப்பட்ட பிறகு இந்த ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்படும்.

இதன்மூலம் இத்தகைய ஏவுகணைகளை வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டனுக்கு அடுத்தபடியாக 6-வது நாடாக இந்தியா இடம்பெறும்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x